அடுத்த நாள் அதற்கான பதில் வந்தது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் பேருந்தில் ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தேன். அருமையான பதிவு என்றும் ரசித்ததாகவும் சொல்லிய எனது சான்டா, "உனக்கு அப்பாவின் நினைவு வந்திருக்கும். அவரை கண்டிப்பாக மிஸ் செய்கிறாய் அல்லவா ? ஒரு கற்பனை போன் கால் ஒன்று செய்து ஷேர் செய்யேன், அவரிடம் இப்போது என்ன சொல்வாய் ? Hope it is not too heavy." என கேட்டிருந்தார். படித்துக் கொண்டிருக்கும் போதே தொண்டையை அடைத்தது. ஜன்னலை திறந்து வைத்தேன். காற்றுப்பட்டது கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. மறுமுறை அதை படித்தேன். கடகட வென கண்ணீர் துளிகள் உருண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. பொதுவாக நான் என்னை கொஞ்சம் மனவலிமையான ஆளாக கருதிக்கொள்வதுண்டு. சட்டென அழுகை, அதுவும் பொதுவெளியில் மிகவும் கடினம் தான். இருபது வருடமாகிவிட்டதே, பழகிவிட்டது என நினைத்திருந்தேனே. ஆனால் இன்று, எது என்னை இப்படி அழ வைக்கிறது ?
யோசிக்கிறேன். என்ன பேசுவேன் அப்பாவிடம்? என்னவென்று அவ்வுரையாடலை ஆரம்பிக்க? நல்லா இருக்கீங்களா அப்பா என்றா ? இருபது வருடங்களின் கதையை, கண்ணீரை, வலியை, வெற்றிகளை, சந்தோஷங்களை, என்னவென்று மொழிபெயர்ப்பேன் ? ஒரு உறுதுணை, ஒரு தூண், கை பிடிக்கும் விரல், சாய்ந்து கொள்ளும் தோள், அழுகை அமர்த்தும் மடி - வேண்டிய பொழுதுகளில் அவை இல்லாமல் இருந்த வெறுமையை எப்படி சொல்வேன்? நினைக்க நினைக்க நிற்காமல் ஒடும் கண்ணீரை மீறி என்ன பேசிவிட முடியும் என்னால் ? இல்லை, இது என்னால் முடியாது. இதை செய்ய என்னால் முடியாது. அப்பா திரும்பி வரப்போவதேயில்லை என்பதானாலேயே என்னால் முடியாது. மன்னித்து விடு சான்டா என பதில் அனுப்பிவிட்டு தொடர்ந்து யோசித்து கொண்டிருந்தேன்.
காயத்தை காலம் ஆற்றிவிட்டதென நினைத்ததை, மனதை அறுப்பதாக அல்லாமால், இயல்பான ஒரு கவலையாக மனதின் அடியில் படிந்துவிட்டதை, ஒரு வார்த்தை, ஒரு கற்பனை, அன்று இருந்தது போலவே அவ்வலியை திருப்பி கொண்டுவர முடியுமா ? இங்கே அழுது கொண்டிருப்பது இப்பொது இருக்கும் நானல்ல, அன்றிருந்த பதினான்கு வயது சிறுமி அல்லவா? ஒரு காயம் என்றும் மறைவதில்லை. உறுத்தாமல் ஓரமாக இருக்க பழகிக்கொண்டிருக்கும். மேலே ஆறியது என நீங்கள் நினைத்தாலும் எத்தனை வருடங்களுக்கு பிறகும் கொஞ்சம் தட்டிப்பார்த்தால், அதே ரத்தமும் சதையுமான காயம்.தான். எக்காயத்தையும் காலம் ஆற்றும் என்பது உண்மை அல்ல. பழக்கப்படுத்தும் என்பதே உண்மை. ஒரு இழப்பின் வலி என்றும் மறைவதேயில்லை