Thursday, January 26, 2012

சமீபத்தில் படித்தவை

2011 படித்த வரிசையின் முதல் சில தாண்டி மீதி இங்கே. [1]... [2]..

** கோபல்ல கிராமம் - கி. இராஜ நாராயணன்

தம் மண்ணை விட்டு பெயர்ந்து வரும் இன்னொரு இடத்தை தேர்வு செய்து அதை விளைநிலமாகவும் இருப்பிடமாகவும் மாற்றும் ஒரு பெரிய குடும்பத்தினரின் கதை. அழகு தேவதையான தம் வீட்டுப்பெண்ணை விரும்பும் மன்னனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் கிளம்பும் அந்த் குடும்பத்தைப் காப்பாற்றும் கடவுளின் செயல்களைச் சொல்லும் 130 வயதான அம்மாள், அவரின் மகன், இன்னுமொரு கதாபாத்திரம் என மூன்று தலைமுறைகளின் வாயிலாக சொல்லப்படும் அவர்களின் வரலாறு. வயதான அம்மாள் சொல்லும் கதைகளில் ஏனோ நம் வீட்டு பாட்டிகளிடம் கதை கேட்கும் உணர்வு.

கதையின் ஆரம்பத்திலேயே நிகழும் ஒரு சம்பவம் - தனியே நடந்து செல்லும் ஒரு பெண் தாகம் தாங்காமல் அருகில் உள்ள ஊருணிக்கு நீரருந்த செல்கிறாள். அவளின் பெரிய பாம்படங்களுக்கு ஆசைப்பட்டு ஒருவன் அவளை தண்ணிக்குள்ளேயே வைத்து அழுத்துகிறான். அவள், அவனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவன் கால் கட்டைவிரலை கடிக்கிறாள். அவன் பிடியை விடாமலிருக்கவே மூச்சு திணறி இறந்து போகிறாள். அவள் பிடி இறுகி, அவன் காலை எடுக்க முடுயாமல் தவிக்கிறான். இதை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது அல்லவா ? "சாமி..எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ"க்கு இது தான் இன்ஸ்பிரேஷன் போல :) (புத்தகத்தின் முதற்பதிப்பு 1976’ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது)

** The Fountain head - Ayn Rand

அய்ன் ராண்ட் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபமாக ஜெயமோகன் தளத்தில் கிளப்பப்பட்ட சர்ச்சையும் அதன் பின்னான வாதங்களையும் அவ்வப்போது கவனித்திருந்த நேரத்தில் இந்த புத்தகத்தின் எலக்ட்ரானிக் காபி கிடைத்தது. முதல் நாள் திறந்து 60 பக்கங்கள் முடித்த நிலையில் நேரே ஃப்லிப்கார்ட் சென்று ஆர்டர் செய்து விட்டேன். தன் கொள்கைகளிலிருந்து மாறாத ஒருவன் பாரம்பரிய முறைகளை எதிர்த்து தன் தொழில்/திறமை ஆன கட்டிடக்கலையில் காலூன்றுகிறான். கல்லூரியில் இவன் வாதத்திற்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கமுடியாத, அவன் எண்ணங்களின் புதுமையையும் புரட்சியையும் ஏற்கமுடியாத‌ ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து அவனை கல்லூரியில் இருந்தி விலக்குகின்றனர். அவ‌னோடு ப‌டித்த‌ ந‌ண்ப‌ன், வெற்றிக‌ர‌மாக‌ ப‌டிப்பை முடித்து வெளிவ‌ருப‌வ‌ன், த‌ன‌க்கு காரியம் ஆக‌ யார் காலையும் பிடிப்ப‌வ‌ன், என்ன‌ த‌ர‌த்திற்கும் துணிப‌வ‌ன் என‌ அவ‌னுடைய‌ க‌தாப்பாத்திர‌த்திற்கும் கதாநாய‌க‌னுக்குமான‌ வாழ்விய‌ல் வித்தியாச‌ங்க‌ளை அனாயாச‌மாக‌ சொல்லிப்போகும் ஒரு நாவ‌ல்.

தனக்கான கொள்கைகளை, தன் திறமையை எங்கும் எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத அவன் பண்பும், கதாநாயகியின் துணிச்சலான காதல், அவள் திறமையும் திமிரும் என இவ்விரண்டு கதாப்பாத்திரங்களின் மேலும், உருவாக்கிய அய்ன் ராண்டின் மேலும் தனி காதலே வந்துவிட்டது. எங்கேயுமே இது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது என்ற உணர்வே எழுவதில்லை. அவ்வளவுக்கு இப்போதும் பொருந்தி போகக்கூடிய கதைப்போக்கு.

** பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - எஸ். ராமகிருஷ்ணன்

'கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு. நாம் அந்த விளையாட்டில் பாதியில் கலந்துகொள்கிறோம். பாதியில் விலகியும் விடுகிறோம். அதற்குள் என்ன நடக்கிறது. ஏதோவொரு சம்பவத்தையோ, நிகழ்வையோ, கதாபாத்திரத்தினையோ பின்தொடர்ந்து செல்கிறோம். சம்பவங்கள், நினைவுகள், சமிக்ஞைகள், உணர்வெழுச்சிகள், அறிந்த அறியாத நிலக்காட்சிகள் தோன்றி மறைகின்றன.'

அருமையாக கட்டமைக்கப்பட்ட, மனிதனின் ஆழ்மனதின் ஆசைகளை, வக்கிரங்களை, வருத்தங்களை சொல்லும் கதைகள். கைக்கண்ணாடியை நண்பனைப் போல் நேசிக்கும் சிறுவன், லேசாக பூனைரோமங்களாலான மீசை முளைத்திருக்கும் சிறுமி, அழகான, தெளிவான முகக்கண்ணாடி ஒன்றை வாங்க ஆசைப்படும் பெண், குடும்பத்தினர் மறந்துவிட்ட பிறந்தநாளைக் தனியாகத் தானே கொண்டாட நினைக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி என நாம் அறியாத கவனிக்க மறந்த பாத்திரங்களின் உணர்வுகள் எஸ் ராவின் வழக்கமான பார்வையில், நடையில் சொல்லப்பட்டிருக்கின்றன.

** கள்ளிக்காட்டு இதிகாசம்

விகடனில் வந்த போதே படித்திருந்தது தான். லேண்ட்மார்க்கில் 3 ஃபார் 2 ஆபரில் ஒன்று தமிழ் எடுக்கலாம் என எடுத்தது. உடனே முடித்துவிடவும் முடிந்தது. நினைவில் நின்ற முக்கியமான காட்சி அந்த பிரசவமும், முடிவுப்ப‌குதியும்.

** மீத‌மிருக்கும் சொற்க‌ள்

1933 முத‌ல் 2004 வ‌ரை - பெண் எழுத்தாள‌ர்க‌ளின் சிறுக‌தைத் தொகுப்பு. தொகுத்த‌வ‌ர் அ. வெண்ணிலா. என்சிபிஎச் வெளியீட்டில்,ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றிய சிறுகுறிப்பு, புகைப்படம், அவர்கள் எழுதிய சிறுகதைகள் என்று நிறைய உழைத்திருக்கிறார் தொகுப்பாளர். அந்த‌ந்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளின் ஊடான‌ பெண்ணின் பார்வைக‌ள், எண்ண‌ங்க‌ள், வாழ்க்கை முறைக‌ள், ச‌முதாய‌ப்பார்வை என‌ ஒரு நூற்றாண்டின் ஊடுருவல். த‌ன் அம்மாவைக் குறித்து ச‌ரியாக‌ புரிந்துகொள்ளாம‌ல், ஒரு வ‌கையில் தாயை பிடிக்காம‌ல் கூட‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் ம‌க‌ள், த‌ன் அப்பாவையும் பாட்டியையுமே பெருமையாய் நினைத்து திரியும் நிலையில், மெல்ல‌ வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ த‌ன் அம்மாவின் உண‌ர்வுக‌ளை புரிந்து கொள்ள ஆர‌ம்பிப்ப‌து என‌ அழ‌கான‌ கோர்வையை கொடுத்திருக்கும் உஷா சுப்பிர‌ம‌ணிய‌ம், சூடாம‌ணி, பாமா போன்ற‌வ‌ர்க‌ள் குறிப்பிட‌த்த‌குந்த‌வ‌ர்க‌ள்.

** The lost Symbol - Dan Brown

இந்த புத்தகத்தை முடித்ததன் மூலம் இவரின் அனைத்து படைப்புக்களையும் படித்தாகிவிட்டது. டாவின்சி கோட் முத‌ல் இது வ‌ரை - எந்த‌ நாவ‌லும் பெரிதாய் ஏமாற்றிவிட‌வில்லை. ப‌டிப்ப‌தில் தொய்வு ஏற்ப‌ட்டிருந்த‌ நாட்க‌ளில் ஒன்றில், Just to Perk up, இதை எடுத்தேன். ஒரு வார‌ இறுதியிலேயே ப‌டித்து முடித்துவிட‌ முடிந்த‌து கிட்ட‌த்த‌ட்ட‌ 600 ப‌க்க‌ங்க‌ளை. துரத்தல்களுக்கு மத்தியில் தப்பித்தல், அதன் மத்தியில் வ‌ழ‌க்க‌மான‌ ஒரு தேட‌ல், புதிர்க‌ள், குறியீடுக‌ள், வ‌ர‌லாறு, ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ சில‌ உண்மைக‌ள் என அதே ஃபார்ம‌ட். ஆனாலும் சுவார‌ஸ்ய‌த்திற்கு குறைவில்லை. ஒரு சாம்பிள் - ஜார்ஜ் வாஷிங்ட‌ன் மேச‌ன்க‌ள் என‌ப்ப‌டும் ஒரு சமூக‌த்தை சார்ந்த‌வ‌ர் என‌வும் அவ‌ரிம் ந‌ம்பிக்கைக‌ளின் ப‌டி தான் வாஷிங்டன் ந‌க‌ரின் ப‌ல்வேறு க‌ட்டிட‌ங்க‌ள் வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அத‌ற்குரிய‌ சில‌ வ‌ழிமுறைக‌ள், ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் அனைத்தும் க‌டைப்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ன. அவ‌ரை கிரேக்க‌க் க‌ட‌வுள் சீய‌ஸைப் போல‌ செய்த‌ சிலை ஒன்று ர‌க‌சிய‌ம். Google George Washington Zeus and check it yourself!

** A Walk in the Woods - Bill Bryson

The last Continent என்ற பிரபல புத்தகத்தை எழுதியவர். மிதமான நகைச்சுவையுடனும், யதார்த்தமான விவரிப்புகளுடனும், நிறைய சுற்றுப்புற சூழல் மற்றும் காடுகள் சார்ந்த தகவல்களுடனும் ஒரு சுவாரஸ்ய நடை இவரது ப்ளஸ். அப்பலாச்சியன் ட்ரெயில் எனப்படும் அமெரிக்காவின் மிக நீண்ட மலைப்பயணத்தை மேற்கொள்ள அவரும் அவர் நண்பரும் எடுக்கும் முயற்சிகளும் அனுபவங்களும் அவர் சந்திக்கும் மனிதர்களும் என விரியும் அவரது இந்த பயணக் கட்டுரையைப்படித்த பின் நானும் ஏன் எனது ட்ரெக்கிங் அனுபவங்களை( செல்வது அனேகமாக ஒரே இடமாக இருப்பினும் ;) ) எழுதக்கூடாது என்ற விபரீத ஆசை உருவாகிவிட்டது :) ஹிஹி :)

**

ஆரம்பித்து முடிக்க அல்லது தொடர‌ முடியாமல் இருப்பவை கொற்கை, ஹோமரின் இலியாத்.

**

Tuesday, January 10, 2012

தனுஷ்கோடி சொல்லும் பாடம் என்ன?



கடந்த சில ஆண்டுகளாகவே புதுவருடம் எப்போதும் வீட்டில், தூங்கத் தயாரான நிலையில், சன் டிவியில் பட்டாசு வெடிப்பதைப் பார்த்துத் தான் ஆரம்பித்துக் கொண்டிருந்தது! இவ்வருடம் HBO’வில் Inception படம் பார்த்து! ஆனால் இடம் தான் கொஞ்சம் வித்தியாசம். நண்பர்களுடன் முதல் முறையாக இராமேஸ்வரம். இராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி ஆர்வம் தான் இப்பயணத்தில் இணைவதில் என்னை செலுத்தியிருக்கக்கூடும்.



தனுஷ்கோடி பார்க்கவேண்டுமென்பது உண்மையிலேயே வெகுநாள் திட்டமாக இருந்தது. வருடத்தின் ஆரம்பத்தில் தேசாந்திரி படித்துக்கொண்டிருந்த போது, அதில் வரும் ஒவ்வொரு இடங்களையுமே ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டுமென்ற ஒரு வேகம் வந்தது. அதில் முக்கியமானது தனுஷ்கோடி. காரணம், அடிக்கடி சென்று வரும் எங்கள் ஊரிலிருந்து சில மணி நேர தொலைவில் தான் இருந்தது அது. அவ்வளவு அருகில் இருந்துகொண்டும் இவ்வளவு நாட்களாக பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் மேலோங்க, அடுத்த தடவை ஊருக்கு செல்லும்போது கண்டிப்பாக சென்றுவிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு முறை அம்மாவிடம் அது பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் சிறுவயதில் ஊருக்கு வந்து தனுஷ்கோடி நிகழ்வைப் பற்றி பாடுவார்கள் எனவும் அது அவ்வளவு சோகம் நிறைந்ததாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். அந்த காலத்தில் ஏற்பட்ட பேரழிவுகளில் மிகப்பிரதானமாக இருந்ததும் வாய்மொழியாகவே மக்கள் இது பற்றி அறிந்ததும் பற்றி சொல்லி மேலும் ஆர்வத்தை கிளப்பிவிட்டார். ஏப்ரல் மாதத்தில் ஒரு வார விடுமுறையில் ஊருக்கு போய்விட்டு அப்படியே அங்கே செல்லலாமெனவிருந்ததை வெயில் கருதி கொடைக்கானல் மாற்றவேண்டியதாயிற்று. இந்த தடவையும் இப்படி அப்படி என்று கடைசி நிமிடம் வரை அலைமோதி தான் பயணத்தில் சேரும்படி ஆனது. இராமேஸ்வரத்தில் முந்தைய இரவு இறங்கியதுமே இனம் புரியாத ஒரு உணர்வு தொற்றிகொண்டது. தனுஷ்கோடி என்னை அழைத்திருப்பது இப்போது தான் என நினைத்துக்கொண்டேன்.


தனுஷ்கோடி கடலில் இந்த ஆண்டின் முதல் சூரிய உதயத்தைப் பார்த்துவிடலாம் என அதிகாலையிலேயே சென்றுவிட்டோம். முகுந்தன்சத்திரம் என்ற அந்த ஒரு இடம் வரை தான் வாகனங்கள் செல்ல முடிகிறது. அதன் பின் நீளமான ஒரு மணல் திட்டு தான். இருபுறமும் கடலைப் பார்த்தபடியே நடக்கும் அந்த அனுபவம், ஒரு புறம் மட்டுமே கடல் பார்த்து நடந்த நம் கிழக்கு கடற்கரைச் சாலை அனுபவங்களை முற்றிலும் கேள்விக்குறியாக்கிவிட்டு, விசித்திரமானதொரு காட்சிப்பிழை போல தோற்றம் தருகிறது. அந்த அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு இருக்கும் ஒரு மெல்லிய சிவப்பு படர்ந்த ஒரு வசீகர ஒளியில் கடல் மின்னுவது அதற்கு இன்னமும் வலு சேர்க்கிறது.

அலைமோதும் கரை ஒருபுறம். அலைகளற்ற தேங்கி நிற்கும் நீர் கடலோடு இணையும் ஆரவாரமற்ற மற்றொரு புறம். நடுவில் கிழக்கில் எங்கள் கவனத்தை செலுத்தியபடியே மெல்ல கால்புதைய நடந்துகொண்டிருக்கும் நாங்கள், இந்த இடம் தான் உள்ளே நிஜமான தனுஷ்கோடி வரை செல்ல வாகனங்கள் கிடைக்கும் இடம். எங்களைத் தாண்டி அப்போதே ஒன்றிரண்டு ஜீப்புகள் சென்றன. தேங்கி நிற்கும் கரையோரமே நீரைக் கிழித்துக் கொண்டு அவ்வாகனங்கள் சென்றதை பார்க்கும் போது உண்மையாகவே வியந்து தான் போனேன். இப்படி ஒரு பயணம் அதற்குள்ளாக இருக்குமென நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை. ஆச்சரியம் தீர்வதற்குள்ளாகவே சூரியனும் லேசாக எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டதால் எல்லோரும் அதைப் படம்பிடிப்பதில் ஆர்வமானோம். குறிப்பிட்ட தூரம் வரை சூரியன் ஏறும் வரையில் அங்கேயே இருந்த பின், வண்டிகள் இருந்த இடத்திற்கு திரும்பினோம். புது வருடத்தில் இராமேஸ்வரம் தீர்த்தமாடவும் இராமலிங்கத்தை தரிசிக்கவும் சில நண்பர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள். இராமலிங்கர் மன்னிக்க, நாங்கள் மட்டும் தனுஷ்கோடி உள்செல்வதாய் தீர்மானித்தோம். ஜீப்புகள் எல்லாம் அந்நேரத்தில் கிளம்பிவிட்டிருந்தன. எங்களுக்காக ஒரு டெம்போ வேன் காத்திருந்தது. இரு புறமும் பெஞ்ச் செட் செய்து ஒரு பெரிய ஸ்கூல் ரிக்‌ஷா போல காட்சியளித்தது.

காலையில் பார்த்து வியந்திருந்த அதே பாதையில் பயணித்தோம். ஷோர்வாக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன ஷோர்டிரைவ்?! ஒரு 5-6 கி.மீ அப்படியே பயணித்து ஒரு காலத்தில் தனுஷ்கோடியின் பிரதான இடத்திற்கு வந்து சேர்ந்தோம். செல்லும் வழியிலேயே முட் செடிகளும், அவை மூடிய வீடுகளும், அரித்துப்போன அந்த சுவர்களும் கடல் பறவைகளும், கழுகுகளும் ஒரு வினோத உலகத்தில் நாம் சென்றுகொண்டிருக்கும் உணர்வைத் தருகின்றன. இறக்கிவிட்ட இடத்தில் நின்ற மூன்று பெரிய தூண்கள் நம்மை வரவேற்கின்றன. அலையோசை ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. எங்கும் இருப்பதை விட அவை அங்கே இன்னும் சோகமாக, வேகமாக இருப்பதைப் போல் ஒலிக்கின்றன. அந்த காலத்திலேயே அவ்வளவு பெரிய பள்ளிக்கூடம், வங்கி, தபால் நிலையம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கிய ஒரு பெரிய கட்டிடம் எலும்புக்கூடுகளைப் போல் நிற்கிறது. மூழ்கிப்போன தண்டவாளங்களையும் கூரைக்கான தூண்களையும் கொண்டு ஒரு இரயில் நிலையம் இருக்கிறது. மொத்தத்தையும் விழுங்கிவிட்டு அதே போல் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் அக்கடலும் எத்தனைப் பேரை தன்னுள் புதைத்துக்கொண்டு அமைதியாய் இருக்கும் கரைமணலும் நமக்கு என்ன சொல்ல காத்திருக்கின்றன? நிலைகொள்ளாத கேள்விகளுடன் மேலும் நடக்க, அந்த தேவாலயம் வருகிறது.

அழிவிலும் அதற்கு ஒரு அழகு இருக்கிறது. அதன் வாசலில் நின்று பார்க்கிறேன். எத்தனை ஆராதனைகளைக் கண்டிருக்கும் இந்த மேடை? எத்தனை மக்களை, எவ்வளவு பிரார்த்தனைகளை, பாவமன்னிப்புகளை பார்த்திருக்கும் ? புயல் வெள்ளத்தின் போது எத்தனை பேர் இங்கே வந்து அடைக்கலம் புகுந்திருப்பார்கள் ? அந்த பிரார்தனைகளும் மணியோசைகளும் அந்த காற்றில் தானே கரைந்திருக்கும் ? இயேசுவோ இராமரோ இயற்கையில் இருந்து ஏன் இந்த மக்களைக் காப்பாற்றவில்லை ? இறுகிய மனதுடன் சிறிது நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம். இன்னமும் அங்கே சில குடும்பங்கள் வாழ்கின்றன. அங்கேயே கடை வைத்து சுற்றுலாப்பயணிகளை நம்பி வாழும் சிலரும் மீன்பிடிக்கும் சிலரும். அவ்வளவு பெரிய ஒரு அழிவிற்கு பின்னும் எது அவர்களை அங்கேயே இருக்க வைக்கிறது?


ஒரு வருடத்தை இந்த சிதிலங்களிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன். என்னை செலுத்தியது என்ன ? தனுஷ்கோடி எனக்கு சொல்லவிரும்பும் பாடம் என்ன? கேள்விகளுடன் கிளம்புகிறேன். திரும்பிவரும் வழியில், தண்ணீர் வேண்டுமென அழுத ஒரு குழந்தை ‘அங்க பாத்திய்யா எவ்ளோ தண்ணி’ என தாய் கடலைக் காட்டி சமாதானப்படுத்தியதும் வேடிக்கைப்பார்த்து புன்னகைக்க தொடங்கிய நொடியில் கிடைத்தது விடை. வாழ்க்கை என்பது அந்த நிமிட வரம். வருத்தங்களையோ வெறுப்புகளையோ சுமந்தலைய மிகுந்த பிரயத்தனப்படும் நேரங்களில் தூரத்தில் நமக்கான சில சந்தோஷ நிமிடங்கள் மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கிறது. வாழும் வரை போராடு என்பதை விட வாழும் வரை கொண்டாடு என்பதே சரி என நினைக்கிறேன். நினைத்ததை, பிடித்ததை செய். நீயாய் இரு. நிறைவாய் இற. With No Regrets!
Related Posts with Thumbnails