Thursday, January 26, 2012

சமீபத்தில் படித்தவை

2011 படித்த வரிசையின் முதல் சில தாண்டி மீதி இங்கே. [1]... [2]..

** கோபல்ல கிராமம் - கி. இராஜ நாராயணன்

தம் மண்ணை விட்டு பெயர்ந்து வரும் இன்னொரு இடத்தை தேர்வு செய்து அதை விளைநிலமாகவும் இருப்பிடமாகவும் மாற்றும் ஒரு பெரிய குடும்பத்தினரின் கதை. அழகு தேவதையான தம் வீட்டுப்பெண்ணை விரும்பும் மன்னனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் கிளம்பும் அந்த் குடும்பத்தைப் காப்பாற்றும் கடவுளின் செயல்களைச் சொல்லும் 130 வயதான அம்மாள், அவரின் மகன், இன்னுமொரு கதாபாத்திரம் என மூன்று தலைமுறைகளின் வாயிலாக சொல்லப்படும் அவர்களின் வரலாறு. வயதான அம்மாள் சொல்லும் கதைகளில் ஏனோ நம் வீட்டு பாட்டிகளிடம் கதை கேட்கும் உணர்வு.

கதையின் ஆரம்பத்திலேயே நிகழும் ஒரு சம்பவம் - தனியே நடந்து செல்லும் ஒரு பெண் தாகம் தாங்காமல் அருகில் உள்ள ஊருணிக்கு நீரருந்த செல்கிறாள். அவளின் பெரிய பாம்படங்களுக்கு ஆசைப்பட்டு ஒருவன் அவளை தண்ணிக்குள்ளேயே வைத்து அழுத்துகிறான். அவள், அவனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவன் கால் கட்டைவிரலை கடிக்கிறாள். அவன் பிடியை விடாமலிருக்கவே மூச்சு திணறி இறந்து போகிறாள். அவள் பிடி இறுகி, அவன் காலை எடுக்க முடுயாமல் தவிக்கிறான். இதை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது அல்லவா ? "சாமி..எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ"க்கு இது தான் இன்ஸ்பிரேஷன் போல :) (புத்தகத்தின் முதற்பதிப்பு 1976’ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது)

** The Fountain head - Ayn Rand

அய்ன் ராண்ட் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபமாக ஜெயமோகன் தளத்தில் கிளப்பப்பட்ட சர்ச்சையும் அதன் பின்னான வாதங்களையும் அவ்வப்போது கவனித்திருந்த நேரத்தில் இந்த புத்தகத்தின் எலக்ட்ரானிக் காபி கிடைத்தது. முதல் நாள் திறந்து 60 பக்கங்கள் முடித்த நிலையில் நேரே ஃப்லிப்கார்ட் சென்று ஆர்டர் செய்து விட்டேன். தன் கொள்கைகளிலிருந்து மாறாத ஒருவன் பாரம்பரிய முறைகளை எதிர்த்து தன் தொழில்/திறமை ஆன கட்டிடக்கலையில் காலூன்றுகிறான். கல்லூரியில் இவன் வாதத்திற்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கமுடியாத, அவன் எண்ணங்களின் புதுமையையும் புரட்சியையும் ஏற்கமுடியாத‌ ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து அவனை கல்லூரியில் இருந்தி விலக்குகின்றனர். அவ‌னோடு ப‌டித்த‌ ந‌ண்ப‌ன், வெற்றிக‌ர‌மாக‌ ப‌டிப்பை முடித்து வெளிவ‌ருப‌வ‌ன், த‌ன‌க்கு காரியம் ஆக‌ யார் காலையும் பிடிப்ப‌வ‌ன், என்ன‌ த‌ர‌த்திற்கும் துணிப‌வ‌ன் என‌ அவ‌னுடைய‌ க‌தாப்பாத்திர‌த்திற்கும் கதாநாய‌க‌னுக்குமான‌ வாழ்விய‌ல் வித்தியாச‌ங்க‌ளை அனாயாச‌மாக‌ சொல்லிப்போகும் ஒரு நாவ‌ல்.

தனக்கான கொள்கைகளை, தன் திறமையை எங்கும் எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத அவன் பண்பும், கதாநாயகியின் துணிச்சலான காதல், அவள் திறமையும் திமிரும் என இவ்விரண்டு கதாப்பாத்திரங்களின் மேலும், உருவாக்கிய அய்ன் ராண்டின் மேலும் தனி காதலே வந்துவிட்டது. எங்கேயுமே இது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது என்ற உணர்வே எழுவதில்லை. அவ்வளவுக்கு இப்போதும் பொருந்தி போகக்கூடிய கதைப்போக்கு.

** பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - எஸ். ராமகிருஷ்ணன்

'கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு. நாம் அந்த விளையாட்டில் பாதியில் கலந்துகொள்கிறோம். பாதியில் விலகியும் விடுகிறோம். அதற்குள் என்ன நடக்கிறது. ஏதோவொரு சம்பவத்தையோ, நிகழ்வையோ, கதாபாத்திரத்தினையோ பின்தொடர்ந்து செல்கிறோம். சம்பவங்கள், நினைவுகள், சமிக்ஞைகள், உணர்வெழுச்சிகள், அறிந்த அறியாத நிலக்காட்சிகள் தோன்றி மறைகின்றன.'

அருமையாக கட்டமைக்கப்பட்ட, மனிதனின் ஆழ்மனதின் ஆசைகளை, வக்கிரங்களை, வருத்தங்களை சொல்லும் கதைகள். கைக்கண்ணாடியை நண்பனைப் போல் நேசிக்கும் சிறுவன், லேசாக பூனைரோமங்களாலான மீசை முளைத்திருக்கும் சிறுமி, அழகான, தெளிவான முகக்கண்ணாடி ஒன்றை வாங்க ஆசைப்படும் பெண், குடும்பத்தினர் மறந்துவிட்ட பிறந்தநாளைக் தனியாகத் தானே கொண்டாட நினைக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி என நாம் அறியாத கவனிக்க மறந்த பாத்திரங்களின் உணர்வுகள் எஸ் ராவின் வழக்கமான பார்வையில், நடையில் சொல்லப்பட்டிருக்கின்றன.

** கள்ளிக்காட்டு இதிகாசம்

விகடனில் வந்த போதே படித்திருந்தது தான். லேண்ட்மார்க்கில் 3 ஃபார் 2 ஆபரில் ஒன்று தமிழ் எடுக்கலாம் என எடுத்தது. உடனே முடித்துவிடவும் முடிந்தது. நினைவில் நின்ற முக்கியமான காட்சி அந்த பிரசவமும், முடிவுப்ப‌குதியும்.

** மீத‌மிருக்கும் சொற்க‌ள்

1933 முத‌ல் 2004 வ‌ரை - பெண் எழுத்தாள‌ர்க‌ளின் சிறுக‌தைத் தொகுப்பு. தொகுத்த‌வ‌ர் அ. வெண்ணிலா. என்சிபிஎச் வெளியீட்டில்,ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றிய சிறுகுறிப்பு, புகைப்படம், அவர்கள் எழுதிய சிறுகதைகள் என்று நிறைய உழைத்திருக்கிறார் தொகுப்பாளர். அந்த‌ந்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளின் ஊடான‌ பெண்ணின் பார்வைக‌ள், எண்ண‌ங்க‌ள், வாழ்க்கை முறைக‌ள், ச‌முதாய‌ப்பார்வை என‌ ஒரு நூற்றாண்டின் ஊடுருவல். த‌ன் அம்மாவைக் குறித்து ச‌ரியாக‌ புரிந்துகொள்ளாம‌ல், ஒரு வ‌கையில் தாயை பிடிக்காம‌ல் கூட‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் ம‌க‌ள், த‌ன் அப்பாவையும் பாட்டியையுமே பெருமையாய் நினைத்து திரியும் நிலையில், மெல்ல‌ வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ த‌ன் அம்மாவின் உண‌ர்வுக‌ளை புரிந்து கொள்ள ஆர‌ம்பிப்ப‌து என‌ அழ‌கான‌ கோர்வையை கொடுத்திருக்கும் உஷா சுப்பிர‌ம‌ணிய‌ம், சூடாம‌ணி, பாமா போன்ற‌வ‌ர்க‌ள் குறிப்பிட‌த்த‌குந்த‌வ‌ர்க‌ள்.

** The lost Symbol - Dan Brown

இந்த புத்தகத்தை முடித்ததன் மூலம் இவரின் அனைத்து படைப்புக்களையும் படித்தாகிவிட்டது. டாவின்சி கோட் முத‌ல் இது வ‌ரை - எந்த‌ நாவ‌லும் பெரிதாய் ஏமாற்றிவிட‌வில்லை. ப‌டிப்ப‌தில் தொய்வு ஏற்ப‌ட்டிருந்த‌ நாட்க‌ளில் ஒன்றில், Just to Perk up, இதை எடுத்தேன். ஒரு வார‌ இறுதியிலேயே ப‌டித்து முடித்துவிட‌ முடிந்த‌து கிட்ட‌த்த‌ட்ட‌ 600 ப‌க்க‌ங்க‌ளை. துரத்தல்களுக்கு மத்தியில் தப்பித்தல், அதன் மத்தியில் வ‌ழ‌க்க‌மான‌ ஒரு தேட‌ல், புதிர்க‌ள், குறியீடுக‌ள், வ‌ர‌லாறு, ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ சில‌ உண்மைக‌ள் என அதே ஃபார்ம‌ட். ஆனாலும் சுவார‌ஸ்ய‌த்திற்கு குறைவில்லை. ஒரு சாம்பிள் - ஜார்ஜ் வாஷிங்ட‌ன் மேச‌ன்க‌ள் என‌ப்ப‌டும் ஒரு சமூக‌த்தை சார்ந்த‌வ‌ர் என‌வும் அவ‌ரிம் ந‌ம்பிக்கைக‌ளின் ப‌டி தான் வாஷிங்டன் ந‌க‌ரின் ப‌ல்வேறு க‌ட்டிட‌ங்க‌ள் வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அத‌ற்குரிய‌ சில‌ வ‌ழிமுறைக‌ள், ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் அனைத்தும் க‌டைப்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ன. அவ‌ரை கிரேக்க‌க் க‌ட‌வுள் சீய‌ஸைப் போல‌ செய்த‌ சிலை ஒன்று ர‌க‌சிய‌ம். Google George Washington Zeus and check it yourself!

** A Walk in the Woods - Bill Bryson

The last Continent என்ற பிரபல புத்தகத்தை எழுதியவர். மிதமான நகைச்சுவையுடனும், யதார்த்தமான விவரிப்புகளுடனும், நிறைய சுற்றுப்புற சூழல் மற்றும் காடுகள் சார்ந்த தகவல்களுடனும் ஒரு சுவாரஸ்ய நடை இவரது ப்ளஸ். அப்பலாச்சியன் ட்ரெயில் எனப்படும் அமெரிக்காவின் மிக நீண்ட மலைப்பயணத்தை மேற்கொள்ள அவரும் அவர் நண்பரும் எடுக்கும் முயற்சிகளும் அனுபவங்களும் அவர் சந்திக்கும் மனிதர்களும் என விரியும் அவரது இந்த பயணக் கட்டுரையைப்படித்த பின் நானும் ஏன் எனது ட்ரெக்கிங் அனுபவங்களை( செல்வது அனேகமாக ஒரே இடமாக இருப்பினும் ;) ) எழுதக்கூடாது என்ற விபரீத ஆசை உருவாகிவிட்டது :) ஹிஹி :)

**

ஆரம்பித்து முடிக்க அல்லது தொடர‌ முடியாமல் இருப்பவை கொற்கை, ஹோமரின் இலியாத்.

**

2 comments:

ரிஷபன் said...

வாசித்த புத்தகங்களை பகிரும்போது இரண்டு விஷ்யங்கள் இயல்பாய் ..
நானும் முன்பே படித்திருந்தால் ‘அட.. ஆமா..’
இல்லாவிடால்.. தேடல்..
இந்தப் பதிவிலும் இரண்டும்.

Anonymous said...

hey...unga asai niraivera vaazhthukkal....

Post a Comment

Related Posts with Thumbnails