Tuesday, September 11, 2012

[மறைந்த தடங்களின் குரல்] ஜனநாயகம் இனி மெல்ல...

2020'ல் இந்தியா வல்லரசாகிவிடும் என இன்னமும் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் தான் பாதுகாப்பு விதிகளை மீறி இயங்கிய பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் விவசாயம் பார்க்க முடியாமல், சோற்றுக்கில்லாமல், தாமும் தங்கள் பிள்ளைகளுமாக நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து தேய்ந்துகொண்டிருந்த‌ அப்பாவி மக்களை பலிகொடுக்கிறோம். அவர்களது ஒழுங்கீனங்கள் நமக்கு விபத்துக்கு பின் தான் தெரிய வருகின்றன. நல்லது. இனி அடுத்த வருடமோ இரண்டு வருடங்களிலோ நிகழப்போகும் விபத்து வரை நான் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவே தான் நம்புவோம். அதுவும் நல்லது. இது கிடக்கட்டும். தீபாவளி பட்டாசு வாங்குவதற்குள் மறந்துவிட வசதியான விஷயம் தான்.

வரிசையாக குழந்தைகள் விபத்துக்குள்ளானார்கள். வாகனங்களில் பள்ளிகளில் சாலைகளில் ஆழ்துளைக்கிணறுகளில் கழிவுநீர் தொட்டிகளில் என ஒரு சீசன் போல தினம் ஒன்று நிகழ்ந்தது. எங்கே கவனக்குறைவு நிகழ்கிறது என‌ சற்றேனும் சிந்தித்துப்பார்க்காமல் நம் வீட்டு குழந்தைகளையும் பள்ளி ஆட்டொவிலோ வேனிலோ அனுப்பிவிட்டு சிறிது நேரமானால் பதைபதைப்பதுடன் முடிந்தது. அதே பள்ளிகளில் சேர்க்கைக்கு இந்த வருடமும் இரண்டு தெருவிற்கு  வரிசை நீளும். ப்ளாக்கில் டொனேஷன் கொடுத்து யாரையாவது பிடித்து சீட் வாங்கி பிள்ளைகளை சேர்த்துவிட்டு பார்ட்டியிங் நடக்கும். வாகனப் பாதுகாப்புச் சட்டங்கள் பலத்தப்படும். ஆர்.டி.ஓ ஆபீசர்கள் இன்னமும் ரூல்ஸ் பேசி பணம் பிடுங்கி செழிப்பர். நல்லது.

இதோ இந்த வருடத்தில் மட்டும் மூன்று அனல் மின் நிலைய விபத்துகள். எல்லாமே நெருப்பு விபத்துக்கள். நல்லவேளை அனல் மின் நிலையமாகப் போய் அக்கம் பக்கத்து ஊர்காரர்கள் பிழைத்தார்கள். விபத்தி ஏற்பட வாய்ப்பே இல்லாத சூப்பர்மேன் அணு மின் நிலையம் ஏற்பாடு செய்கிறார்களே, அங்கே நிகழ்ந்திருந்தால் ? அவ்வ்வ்! நோ. அதெப்படி விபத்து நடக்கும். தீப்பிடித்து எரிந்தால் கூட அது எரியாது என்று பொங்கியெழுந்து பதில் அளிக்கும் நண்பர்களே. உலகத்தில் பெரும்பாலான அணு உலை விபத்துகள் ஏற்பட்டது மனிதத் தவறுகளால் தான் என்று அறிவீர்கள் தானே! டெல்லியில் எப்படியோ(?!) ஒரு காயலான் கடைக்கு வந்து சேர்ந்து வெகு நாளாக இருந்து அதன் உரிமையாளரை சாகடித்த கதிர்வீச்சுப் பொருளும் இங்கே கல்பாக்கத்தில் இரண்டு தொழிலாளிகள் திருடிக் கொண்டு வந்து நடுவில் பயந்து அதை கூவம் நதியில் வீசி இரண்டு நாட்கள் கூவத்தையே குடைந்த கதைகளும் அங்கே நடக்காமல் இருக்கும் என்று நம்புவோமாக! என்ன, நம்பவில்லையா? வெளியில் சொல்லாமல் இருக்கவும். நீங்களும் தேசத் துரோகியாக சிறை செல்ல நேரலாம். யார் கண்டது?

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், பொதுவாகவே நம் அரசு ‘Reactive' modelஐத் தான் கையாண்டுவருகிறது. Proactive என்பது மிக சொற்பம் தான். முதற்சொல்லப்பட்ட மாடலும் ‘இதான் உங்க டக்கா’ ரேஞ்சுக்கு மிக மிக மெதுவானது. சாதாரண ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்வோம். மிக அதிகமான அளவில் போக்குவரத்து புழங்கும் வகையில் ஐடி கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கியாகிவிட்டது. அதற்கு ஏற்றவாறு சாலை வசதிகளை எப்போது அமைத்தார்கள் ? இப்போது முக்கிய இடங்களில் பொறுக்க முடியாத அளவு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த பாலங்கள் கட்டலாம் என இனிமேல் தான் முடிவெடுப்பார்கள். அதைக் கட்டி முடிக்கும் வரை நமக்கு தான் முழி பிதுங்கும். கம்பெனிகளுக்கான அனுமதி கொடுப்பவருக்கும் போக்குவரத்துத் துறைக்கும் சாலை மேம்பாட்டுத் துறைக்கும் கம்யூனிக்கேஷனே இருக்காது. அப்போது தான் போட்ட சாலையை குடிநீருக்கு ஒரு முறை, கழிவுக்குழாய்க்கு ஒரு முறை, தொலைப்பேசிக்கு ஒரு முறை என எத்தனை தடவை வேண்டுமானாலும் சளைக்காமல் தோண்டுவோம். அதற்குள் ஆட்சி வேறு மாறிவிட்டால் கிழிந்தது. அது தானே நம் வரலாறு, கலாச்சாரம் எல்லாம்? பேரிடர்களில் ஒன்றான போபால் விபத்தும் அதன் வழக்கும் நஷ்ட ஈடும் அக்கழிவுகளை எப்படி அகற்றினார்கள் (அதான் ஒண்ணுமே பண்ணலையே’ன்னு எல்லாம் கேட்கப்படாது. Refer முந்திய பத்தி கடைசி வாக்கியம்) என்றெல்லாம் பார்த்துகொண்டு தானே இருக்கிறோம் ?

ஒன்றுமில்லை. இங்கே கல்பாக்கத்திலேயே ஒரு பெருவிபத்து நடந்தால், 45-50 கிமீ தூர சுற்றளவிற்கு ஒரு மணி நேரத்தில் காலி செய்ய வேண்டியிருக்கும். மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். அதற்குள் உங்களுக்கு தகவல் தெரிய வைத்து சென்னை ஐடி சாலையில் ஒரு பகுதியையும், ஈ.சி.ஆரில் ஒரு பகுதியையும், அந்த பக்கம் மரக்காணம், இந்த பக்கம் வந்தவாசி வரை மூன்று பக்க சுற்றளவையும் காலி செய்யும் அளவிற்கு அரசு இயந்திரம் வேகமாக செயல்படும் என நம்புகிறீர்கள் ? எல்லாம் பூண்டோடு கைலாசம் தான். அதுவும் குரூரமாக. மெல்ல மெல்ல.வலியிலும் வேதனையிலும் துடிக்க துடிக்க. நீங்கள் மட்டுமில்லை. உங்கள் குடும்பம். உங்கள் குழந்தைகள். இனி வரும் பல தலைமுறைகளுக்கும்.சே. சொல்லவே ரொம்ப கொடூரமாக இருக்கிறது!!!


இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையிலேயே தான் அங்கே போராட்ட குழுவினருக்கு எதிராக வன்முறை கையாளப்பட்டிருக்கிறது என்ற செய்தி வருகிறது. அப்பாவி மக்களுக்கு எதிராக ஏதோ பாகிஸ்தான் பார்டரைப் போல ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்ட போலீசார். ஒரு வருடமாக அறவழியில் போராடி வருபவர்களுக்கு தடியடியும் கண்ணீர்ப் புகையும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு எனப் பள்ளிகளில் படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த பிரக்ஞையும் இல்லாமல் சாலையில் ஓரம் சிறுநீர் கழிக்கும் குடிமகனுக்கு மட்டுமே ஜனநாயகம் செல்லுபடியாகும் போல! இன்னமும் கூடங்குளம் வந்தால் தான் இந்தியா வல்லராசாகும் என்று யாராவது சொல்லிக்கொண்டு இருந்தீர்களானால், மன்னிக்க வேண்டும் நண்பர்களே. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் இன்னமும் நிறைய இருக்கிறது. கீற்று, dianuke போன்ற தளங்களில் கூடங்குளம் எனத் தேடி அத்தனை விஷயங்களையும் தெளிவாக, திறந்த மனதுடன் படித்துவிட்டு வாருங்கள். அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010 ஒன்றை இயற்ற உள்ளார்கள் இல்லையா, அதைப் பற்றியும் படித்து விடுங்கள். கல்பாக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வெகுவாக பெருகிவரும் கொடூர கேன்சர் நோய்கள் குறித்த, ஒரு மருத்துவர் இயக்கிய ஆவணப்படத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள்.  இது சம்பந்தமாக இங்கே நடக்கும் கூட்டங்களில் ஏதேனும் ஒன்றில் கலந்துகொண்டு அவர்களின் பிரதிநிதிகளின் வாதங்களைக் கேளுங்கள். அதன் பின் நிறைய பேசலாம். 

அப்படியும் மனது கலங்காமல் இருந்தீர்களானால், எவன் செத்தா எனக்கென்ன என்ற மிகச்சராசரி மனிதனின் மனநிலையிலேயே தான் இருக்கிறீர்கள் என அர்த்தம். ஆனால் ஒரு நாள் அது உங்களையும் துரத்தி வரலாம். அப்போது சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகமூடி அணிந்தது போல, கதிரியக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வழியே இல்லை. உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் சேர்த்து தான் அவர்கள் போராடுகிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்திற்கும். அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை எனினும் தேசத்துரோகிகள் எனவும் அந்நியசதிக் கைக்கூலிகள் எனவும் அவமானப்படுத்தாமல் இருப்போம். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும் நம்மை சரிவர வந்தடையவில்லை. அரசும் பொறுப்பற்ற ஊடகங்களும் அரசியல்வாதிகளையும் கண்மூடித்தனமாக நம்பாமல் கொஞ்சம் நாமும் கொஞ்சம் ‘மெய்ப்பொருள்’ காண இனிமேலாவது முயல்வோம். 

வாழ்க ஜனநாயகம்!

Related Posts with Thumbnails