Friday, April 1, 2011

யுவன் சந்திரசேகரின் ’வெளியேற்றம்’ நாவல்

அந்த ஒரு கணத்தை எல்லாரும் கட்டாயம் கடந்து வந்திருப்போம். எல்லாத்தையும் விட்டுவிட்டுப் போய்விடலாம், எதுவுமே தேவையில்லை என யோசிக்கும் ஒரு கணம். என்ன வாழ்க்கை இது என யோசிக்கும் ஒரு கணம். தனியே பிரயாணித்துக் கொண்டிருக்கையில் இறங்குமிடமே வராமல் அப்படியே பயணம் தொடர்ந்து கொண்டே இருக்காதா என ஏங்கும் ஒரு கணம். பறவையைப் போல எந்தக் கட்டுப்பாடுகளும் கடமையும் இல்லாமல் பறந்து திரிய நினைக்கும் ஒரு கணம். எல்லாவற்றில் இருந்தும் வெளியேறி வெறுமையாய்த் திரிய வேண்டும் என விரும்பும் ஒரு கணம்.

"வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பிடித்திருக்கும் ஏதெனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றன. அவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக்கொள்கின்றன." என்ற பின்னட்டையின் வாசகமும் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் என ஈர்த்ததில் தன் பங்கைச் செய்தது.

மேற்சொன்ன வெளியேற்றங்களுக்கு அப்பாலும் வெளியேறிச்செல்லும் ஒருவரின் கதை இது. அதை, அவரைச்சுற்றிப் படிந்திருக்கும் பல பேரின் கதைகளைக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாதி முழுக்க தனித்தனி இழையாக ஒவ்வொருவரின் கதைகள் ஒவ்வொரு அத்தியாயமாக வருகின்றன. பின்பாதியில் அத்தனைக்கும் குறுக்கில் இழைகளைக் கோர்த்து அவை பின்னிப் படரும் புள்ளிகளைப் பார்வைக்கிடுகிறார் யுவன். மெல்ல கட்டவிழ்கிறது ஒரு பெரும் மனிதரின் கதை. அவரைச் சுற்றி அவரைப் பற்றி அறிந்த அவரால் ‘வெளியேற்றப்பட்ட’, அவரின் அற்புதங்களைச் சந்தித்த மனிதர்களின் கதைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

பயணங்களில் சந்திக்கும் சுவாரஸ்யமான பக்கத்து இருக்கைக்காரரின் பேச்சு போல மிக இயல்பாய் பயணிக்கிறது ஒவ்வொருவரின் கதையும். தொடர்ந்து வந்த நிறைய கதாபாத்திரங்களினால் எனக்கு ஒரு சில இடங்களில் யாரின் கதை என்னது என பிற்பாதியில் நினைவு கொள்வதற்குத்தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது போலும்.

40வயதைக் கடந்த ஒருவர் ஒரு கல்யாணத்திற்காய் தனியாய் பயணம் செய்கையில் சந்திக்கும் ஒரு நபரின் கதை அவரிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருகிறது. மிகச் சராசரியாய் ஒரு எல்.ஐ.சி. முகவராய் இருந்து, திருமணம், இரண்டு குழந்தைகள், நாற்பது வயதில் ஒரு சொந்த வீடு என பெரும்பாலான வாழ்க்கையைக் கழித்த அவருக்கு தான் சந்தித்த நபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மிக அதியசமாகவும் ஈர்க்கும்படியாகவும் இருக்கின்றன. அதன் பின்புலத்தில் இருப்பவர்களையும் அவர்களின் அனுபவங்களையும் அத்தனைப்பேரையும் இன்று சேர்க்கும் புள்ளியையும் தேடிச்செல்கிறார். இதுவே நமக்கு இரண்டாவது பாதியில் தான் புலப்படுகிறது.

ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதம். எத்தனை வட்டார வழக்குகள், பழக்கங்கள், மொழிகள், இடங்கள்! அவர் கேட்கும் கதையை நாமும் பக்கத்தில் இருந்து கேட்பது போன்ற உணர்வு. பக்கத்து வீட்டு மனிதர்களைப் போன்ற எளிமை, ஒவ்வொரு கதாபாத்திரத்தினிடமும். ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான அனுபவங்கள் வேதமூர்த்தி என்ற பெரியவருடனானதே. அவர் இவர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தெளிவு, காட்டிய வழி, நிகழ்த்திய அற்புதம் என ஒவ்வொன்றும் ஒரு வகை.

ஒரு கதையில் தனக்குப் பெண்சீக்கு வந்ததாய்க் கூறி ஒரு வைத்தியரிடமிருந்து திரும்பி வருகிறான் ஒருவன். இனி வாழ்க்கையே அவ்வளவு தான் என நினைக்கிறான். வரும் பாதையில் தண்டவாளங்களைத் தாண்ட நேருகையில் ரயிலில் பாய்ந்து உயிர் விட்டுவிடலாம் என யோசிக்கிறான். எல்லாவற்றில் இருந்தும் இந்த உடம்புக்கு விடுதலை, உடம்புக்குத் தானே எல்லாம், உயிருக்கு ஏது எனக் கூறும் அந்த சில வரிகளில் மரணத்தின் ஒருவித வசீகரத்தை உணர்வது உண்மை.

மரணத்தின் பின், பிறப்பிற்கு முன்னான உலகம், ஜென்மங்கள், ஜீவசமாதி, பல தத்துவங்கள், அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் என இவற்றைப் போன்ற விஷயங்களில் பெரிதான நம்பிக்கை இல்லாத என்னைப் போன்ற ஒருவரையும் இயல்பாக சுவாரஸ்யமாகப் படிக்க வைத்ததே இந்நாவலின் வெற்றி எனக்கூறலாம். முக்கியமாக, முன்னுரை இல்லாத இந்த நாவலின் பின்னுரை கூறுவது, கூறப்பட்ட அத்தனை மாயநிகழ்வுகளும் உண்மை என்பதே!!

வெளியேற்ற‌ம் - யுவன் சந்திரசேகர்
உயிர்மை பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க‌:
http://www.uyirmmai.com/Publications/bookDetails.aspx?bid=256

இந்த பதிவை வெளியிட்ட
உயிர்மை - உயிரோசை'க்கு நன்றி.

Tuesday, March 8, 2011

இன்று மகளிர் தினம்!

எனக்குத் தெரிந்து சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இங்கே பெண்கள் தினம் என ஒன்று இருப்பது பரவலாகத் தெரிய வந்தது. அதிலிருந்து அன்றைய தினம் அலைபேசி குறுஞ்செய்திகளும் மின்மடல்களும் அழைப்புகளுமான வாழ்த்துக்களுடனே நன்றாகத் தான் செல்கின்றன. பெண்கள் தினத்திற்கென பிரத்யேக விற்பனைகளும் வந்தாயிற்று. ஆடைகளிலிருந்து கணிப்பொறி வரை. தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், அலுவலகத்தில் கொண்டாட்டங்கள், போட்டிகள் என அதற்கும் குறைவில்லை.

இதுவும் மேலை நாட்டுக் கலாச்சாரம் என கொடி பிடிப்பவர்களும், ந‌ம் நாட்டில் என‌ பெண்க‌ளுக்கு என்ன‌ ம‌ரியாதைக்குறைவு இருக்கிற‌து ? பிர‌தான‌ ந‌தியில் இருந்து பிர‌த‌ம‌ ம‌ந்திரியை இய‌க்குப‌வ‌ர் வ‌ரை பெண்க‌ள் தானே என‌ வாதிடுபவ‌ர்க‌ளும் இன்ன‌மும் என்ன‌ பெண்க‌ள், பெண்க‌ள் பிர‌ச்ச‌னை என்று பேச இருக்கிற‌து, இப்போது தான் எல்லாத் துறையிலும் வ‌ந்துவிட்டார்க‌ளே என‌ ச‌லித்துக்கொள்வ‌ர்க‌ளும் பெண்க‌ள் குறித்தான‌ பிர‌ச்ச‌னைக‌ளின் அல‌ச‌லை தொலைக்காட்சியில் எப்போதாவது காண‌ நேர்ந்தாலும் உடனே சான‌லை மாற்றிவிடுப‌வ‌ர்க‌ளும் இருந்துகொண்டு தான் இருக்கிறார்க‌ள்.

ஒரு புற‌ம், சென்ற நூற்றாண்டின் கடைசி பத்து இருபது வருடங்களுடன் ஒப்பிட்டாலே, மிக‌ மிக‌ அசாத‌ர‌ண‌மான‌ வ‌ள‌ர்ச்சியை காண‌முடிகிற‌து பெண்க‌ளிட‌ம். இன்னொருபுற‌ம், பெண்க‌ள் மீதான‌ வ‌ன்முறை நிகழ்வுகள் ஒவ்வொரு மூன்று நிமிட‌ங்க‌ளுக்கு ஒருமுறை நிக‌ழ்த்த‌ப்ப‌டுகிற‌து. ஏனிந்த‌ முர‌ண்பாடு. ந‌ட‌ப்ப‌தில் எதை ந‌ம்புவ‌து. எந்த செய்தித்தாளையேனும் எடுத்து வாசித்துப்பார்த்தால் எந்த மூலையிலேனும் பெண்கள் சாதித்த கதை தெரியலாம். பரவலாகத் தெரிவது என்ன என சற்றுப் பொறுமையாக புரட்டிப்பார்த்தால், எத்தனை எத்தனை சிக்கல்கள் பெண்ணாய் இருப்பது என்ற ஒரே காரணத்தினால்.

இன்று ஒரு நீதிமன்ற தீர்ப்பு. கோமாவில் இருக்கும் அறுபது வயதாகும் ஒரு மூதாட்டியை கருணைக்கொலை செய்ய நீதின்றம் மறுப்பு. அதிலென்ன சிக்கல்? நல்ல தீர்ப்பு தானே என யாரும் யோசிக்கும் முன்னரே தொடர்கிறது அவரின் கதை. நர்ஸ்‘ஆக வேலை செய்து வந்த அவர் இருபத்துமூன்று வயதில் ஒரு துப்புரவுத் தொழிலாளியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகினார்.அவர் எதிர்க்கக்கூடாது என்பதற்காக நாய்களை கட்டும் இரும்புச் சங்கிலியில் அவர் கழுத்தை நெரித்திருக்கிறான். மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு இத்தனை வருடங்களாக கோமாவில் கழிக்கும் அவரது வாழ்க்கையின் அவலம். கருணைக்கொலை செய்ய விண்ணப்பிக்கும் அளவு சென்றுவிட்ட அவரின் சுற்றுப்புறம். அவர் தொலைத்தது என்ன? இத்தனை வருட வாழ்க்கை. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பிஞ்சு பெண் குழந்தைகளைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்த்தால், அவர் வருங்காலம் எத்தனைக் கேள்விக்குறியானது எனப்புரியும். மனரீதியாக அவர்களின் பாதிப்புகள் மட்டுமே அதன்பின் அவர்களின் வாழ்க்கைமுறையை பெரிதும் பாதித்துவிடுகின்றன.

வெளியே தெரிவது மிகச்சில. யாரும் அறியாமல் நிகழ்த்தப்படும் கொடூரங்கள் பலப்பல. யாரும் அறியாமல் சிந்தப்படும் பெண்களின் கண்ணீர்த்துளிகளும் பல கோடி.மேற்கூறிய கடைநிலை வக்கிரங்கள் இல்லாமல், மிகச் சாதரணமாக நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் பற்றி தனியே சொல்லவேண்டுமா என்ன ? பொது இடங்களில் உரசும் உடல் ரீதியான செயல்களில் இருந்து மிக நுணுக்கமான உணர்வு ரீதியிலான செயல்கள் வரை, ஒன்றா இரண்டா ?

படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லாமல் பொருந்தக்கூடிய சில விஷயங்கள் இவை. எத்தனைப் பெண்கள் “இதெல்லாம் தேவையில்லை உனக்கு” என்ற தன் குடும்பத்தின் கருத்துக்காக தங்கள் ஆசையை கனவுகளை நொறுங்கக்கொடுத்து வந்திருக்கிறார்கள். எத்தனைப் பெண்களின் நட்புவட்டங்கள் கணவனுக்குப் பிறகு காணாமலேயே போய்விடுகின்றன. எத்தனை பெண்களின் சின்ன சின்ன ஆசைகள் கூட அநாவசியமாய் அவசியமற்றதாய் ஒதுக்கப்படுகின்றன. பெண்களாய் இருப்பதன் ஒரே காரணத்தினால் இளக்காரமாகப் பார்க்கப்பட்ட தருணங்கள் எத்தனை. அவளை நோக்கி வீசப்படும் கேள்விகள் எத்தனை. துளைக்கும் பார்வைகள் எத்தனை. அத்தனையையும் விட்டுக்கொடுத்து அவர்களையும் புன்னகையுடன் அரவணைத்துச் செல்லும் பெண்கள் எத்தனை பேர்.

நேற்றுப்படித்த அஜயன்பாலாவின் கட்டுரை ஒன்று மிகப்பாதித்தது. ஆடை விஷயங்களில் இன்னமும் கட்டுப்பாடுகளைச் சந்திக்கும் பெண்களின் மனநிலை. அரைகுறையாய் செல்வது சுதந்திரமா என வாதிக்க நான் இங்கே விரும்பவில்லை. இது அதைப் பற்றினதும் இல்லை. மிகச்சாதாரண ஒரு விஷயத்திற்குக்கூட ஒரு வரைமுறைகளின் கீழ் அடக்கியே வைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் மனநிலையிலிருந்து படித்துப் பாருங்கள் புரியும்.

குளிரூட்டப்பட்ட எல்லா வசதியும் நிறைந்த ஒரு அலுவலகத்தின் கணினியில் இதனை தட்டச்சுவது மிகச்சுலபமானது தான். அத்தனையையும் அனுபவித்து/ அதையே வாழ்க்கையாகக் கொண்டு/ அதிலிருந்து மீண்டு/ குடும்பத்திற்காக உழைத்து/ அதற்கு மேலும் ஒரு நிலையை அடைந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியான பெருமிதமான பெண்கள் தின வாழ்த்துகள். இன்னமும் நாம் வாழும் சமுதாயம் பெண்களுக்கு என சில புரிதல்களைக் கொள்ளும் பெண்கள் தினமும் வருங்காலத்தில் வரும் என்ற நம்பிக்கையோடு.

வாழ்த்து தெரிவித்த‌ அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் ந‌ன்றிக‌ள். உங்க‌ள் வாழ்த்துக‌ளின் பின்னால் உள்ள‌ அன்பும் பெண்கள் மீதான மரியாதையும் வ‌ருங்கால‌த்தை ந‌ம்பிக்கையூட்டுவ‌தாய் ஆக்குகின்றன.

வெளியிட்ட கீற்று.காம்’க்கு நன்றி.

Saturday, February 12, 2011

காதல் மட்டும் புரிவதில்லை !!! [காதலர் தினப் பதிவு] பகுதி 1


உலகத்தில் உயிரினங்கள் எத்தனையோ கோடி. ஒவ்வொன்றும் ஒரு வகை ஆனாலும் அத்த‌னைக்கும் அடித்தளம் காத‌ல். காம‌த்தின் இறுகிய‌பிடியை மென்மையாய் மாற்றும் ம‌ந்திர‌ம். பொங்கி வரும் அன்பின் பிரவாகம். ஹார்மோன்களின் கிளர்ச்சி. அகமோ புறமோ தேவைகளைப் பூர்த்தி செய்யும் வடிகால். தத்தளித்து தவிக்கையில் கிடைக்கும் ஒரு கிளை. இன்னொரு தாய்ம‌டி. அத்த‌னை உற‌வுக‌ளின் ஒரே வ‌டிவ‌ம். நம்மையே செதுக்கிக்கொள்ள‌ கிடைக்கும் உளி. சிற‌க‌டித்து ப‌ற‌க்க‌ ஒரு இற‌க்கை. ஏறிக்கொண்டே இருக்கும் போதை.

பாலையில் விழும் ம‌ழைத்துளி. பல வண்ண வானவில். பாளமாய் வெடித்து இருக்கும் நில‌த்தில் துளிர்விடும் விதை. தேவ‌தைக் க‌தைக‌ளின் கொடுக்கப்படும் வ‌ர‌ம்.தாய்மையைப் போல் தூய்மையான, தன்னலமற்ற அன்பு படர்ந்து விரியும் வற்றாத காட்டருவி. இரவின் மழை. தவழும் குழந்தையின் நடை பழகல். மழலைச் சிரிப்பில் வடியும் எச்சில். முதல்முறையாய் கடற்கரையைப் பார்ப்பவனின் குதூகலம். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம்.

திருடித் தின்ற‌ அடிக்க‌ரும்பின் இனிப்பாய் நாக்கில் தித்திக்கும் க‌ள்ள‌த்த‌ன‌மான‌ இனிப்பாய்த் தான் முத‌லில் ஆர‌ம்பிக்கிற‌து காத‌ல். காத‌லிக்க‌ப்படுபவருக்கே கூட‌த் தெரியாம‌ல்! காத‌லிப்ப‌வ‌ருக்கே உரிய பிரத்யேக அனுப‌வ‌ம் அது. ப‌ல‌ப்ப‌ல‌ ப‌ரிணாம‌ங்க‌ளையும் ப‌டிம‌ங்க‌ளையும் கொண்டு க‌ண்க‌ளைக் க‌ட்டிக்கொண்டு புதிர்பாதையில் விளையாடும் க‌ண்ணாமூச்சி ஆட்ட‌ம். அதுவரையில் முன் இருந்தவற்றை எல்லாம் ஒரு ஒரத்தில் தூக்கி எறிந்துவிட்டு அது மட்டுமே விஸ்வரூபம் எடுத்து செய்யும் வன்முறை.

உற‌வுக‌ளை வேண்டாத‌வ‌ர்க‌ளாக்கி ந‌ண்ப‌ர்க‌ளை தேவையான‌வ‌ர்க‌ளாக்கி காத‌ல‌னை/காத‌லியை தெய்வ‌ம்/தேவ‌தை ஆக்கிடும் ஓர் உன்ம‌த்த‌ நிலை. ஒரு புன்னகையில், ஒரு வார்த்தையில், ஒரு தொடுத‌லில், ஒரு ஆறுத‌லில், ஒரு கைப்பற்றலில், ஒரு ஊட‌லில்/கூட‌லில் இன்னொரு பிற‌ப்பைத் த‌ரும் மெய்ஞ்ஞான‌ம். ஒரு க‌த‌விலேயே சொர்க்க‌த்தையும் ந‌ர‌க‌த்தையும் காட்ட‌க்கூடிய‌ ஒரு மாய‌க்க‌ண்ணாடி. மொட்டு ஒன்று ம‌ல‌ர்வ‌தின் ரக‌சிய‌ம்.

திடீரென‌ வாழ்விற்கு வ‌ண்ணம் சேர்க்கும் நிற‌க்குடுவை. சுவை கூட்டிடும் ஒரு அற்புத‌ நிலை. ர‌ச‌னைக‌ள் சேர்க்கும் அனுப‌வ‌ம். அழ‌கிய‌ல். ந‌ம்மையும் ந‌ம் சுற்றுப்புற‌த்தையும் இய‌ற்கையையும் இசையையும் க‌லையையும் கூடுத‌ல் அழ‌காக‌ காட்டும் வ‌ண்ண‌த்திரை.

என்ன சொல்லி புரியவைப்பது காதல் என்பது என்ன என்று. வார்த்தைகளில் விளக்க முடியாததொரு பிரபஞ்சத்தின் உணர்வு. அதை நகையாடுபவர்களோ புரியாதவர்களோ, அதை கண்டிப்பாய் அனுபவிக்காதவர்களே!

எந்த‌ வ‌கையிலும் குற்ற‌ம் சொல்ல முடியாத‌ அடிப்ப‌டையான‌, அத்த‌கைய தூய்மையான உணர்வை, உற‌வை இந்த‌ காதல‌ர் தின‌த்துக்காக‌ ம‌ட்டுமே கூறுவதில் உட‌ன்பாடு இல்லையெனினும் இதை ஒரு கார‌ண‌மாய்க் கொண்டேனும் எழுதுவதில் ம‌கிழ்ச்சியே.

இவ்வ‌ள‌வு சொல்லிய‌ பிற‌கும் க‌ண்க‌ளில் விழுந்த‌ மெல்லிய‌ துரும்பாய் உறுத்தும் காதல் என்ற‌ பெய‌ரில் நம்மைச் சுற்றி ந‌‌ட‌க்கும் கூத்துக்க‌ளும் முட்டாள்த‌ன‌ங்க‌ளும்.

தொட‌ர்கிறேன்.

Wednesday, January 5, 2011

பாஸ்! நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்! [காரெக்டர்ஸ்]

இவர் தாங்க நம்ம இளம் வில்லேஜ் விஞ்ஞானி. கிராமத்துல பொறந்து வளர்ற, 8-12 வயசுக்குள்ள உள்ள ஒரு சின்னப்பையன். படிக்கிறதக்கூட மனப்பாடம் பண்ணாம புரிஞ்சுகிட்டு தனக்கு தெரியுற மாதிரி கொடுக்கிற புள்ள. ஒரு ஆராய்ச்சியாளர் ஆகணும்’கிறது தான் அவர் கனவு ( அது என்ன ஆச்சு’ன்னு கடைசியில பாக்கலாம்) கண்ணுலயே அவ்வளவு கனவையும் கேள்விகளையும் ஆர்வத்தையும் தேக்கி வச்சுருந்த அந்த வயசுல அவர் பண்ணினத எல்லாம் நினைச்சா ஆச்சரியமா இருக்கு.
இப்படித்தான் ஒரு தடவ, வீட்டுக்கு பின்னாடி தண்ணி தேங்கி இருந்திருக்கு. அதுல இருந்து கொசுவா கிளம்பிருக்கு. இதப் பாத்த நம்ம இ.வி.வி. யோசிச்சு இருக்காரு. எப்புடி கொசு வருது’ன்னு. சரி தண்ணி இருக்கதால அது மேல வந்திருது. அத சாகடிக்கணும்’னா என்ன பண்ணலான்னு தீவிரமா யோசிச்சதில மண்ணெண்ணெய் தெளிச்சு விடலான்’ற முடிவுக்கு வந்தாரு. அத சும்மா தெளிச்சா நாம எப்புடி விஞ்ஞானி? மறுபடியும் யோசிச்சதுல அண்ணன் செண்ட் பாட்டில் ஞாபகம் வந்திச்சி.அய்ய்! அதுல மண்ணெண்ணெய்ய ஊத்தி சும்மா புஸ்ஸு புஸ்ஸுனு அடிச்சா? செண்ட் பாட்டில உடனெ எடு. மேல மூடிய கழட்டு. மூளை அப்படியே கட்டளைகள் கொடுத்திட்டே இருக்கு. மண்ணெண்னையா ஊத்தியாச்சு. அடிச்சி பாத்தா வரல!! இப்ப என்ன பண்றது..என்னவா இருக்கும்’னு யோசிச்சதுல உள்ள அழுத்தம் பத்தலைன்னு கண்டுக்கிட்டாரு.

அழுத்தத்திற்கு என்ன பண்ணாலான்னு பாத்தா, சைக்கிள்கடைக்கார மாமா இருக்காரே. அவர்கிட்ட இருந்து காத்தடிக்கிற பம்ப்ப வாங்கிட்டு வந்து காத்தடிச்சா சரியாயிடும்’னு முடிவு பண்ணி, செண்ட் பாட்டில்’ல அழுத்துற மூடிய திறந்து உள்ள இருக்க அந்த சின்ன குழாய்’ல காத்தடிக்க முயற்சி பண்ணினாரு. அடிக்க முடியல. எப்புடி கனெக்‌ஷன் கொடுக்கிறது? வால்ட்யூப் வைச்சு அடிச்ச உடனே, பாட்டில அழுத்தம் வந்திருச்சு. ஆனா பம்பில அழுத்தம் அதிகமாகி, வால்வு உள்ளாற போயி, மண்ணெண்ணெய் உள்ள போயி க்ரீஸ் எல்லாம் எடுத்திருச்சு. அதுக்கப்புறம் காத்தே அடிக்க முடியல. பம்பு தான் புஸ்ஸு புஸ்ஸு’னுது. அமைதியா போயி அத இருந்த இடத்தில வச்சிட்டு எஸ்கேப்பு ஆகி வந்திட்டாரு.

அவங்க ஊரில, ஆஸ்பத்திரி’யில இருந்து உபயோகப்படுத்தின சலைன் பாட்டில், அந்த ட்யூப், ஊசி, சிரிஞ்ச், மருந்து பாட்டில் எல்லாம் ஒரு இடத்தில போட்டுருப்பாங்க. அந்த சலைன் பாட்டில் மேல அவருக்கு அவ்வளவு காதல். அத எடுத்திட்டு வந்து, அந்த வட்டத்தை திருகினா எப்படி தண்ணி வேகத்தை கூட்டவும் குறைக்கவும் முடியுது’ன்னு பாத்துக்கிட்டேயிருப்பாரு. அத வச்சு என்ன பண்ணலான்னு யோசிச்சு அவர் கண்டுபுடிச்சது தான் சொட்டு நீர் பாசன முறை. தான் வளர்த்த செடிக்கு பக்கத்துல இருந்து தண்ணி ஊத்த முடியலயே’ன்ற வருத்தத்த தீர்த்துக்கிறதுக்காக, இந்த சலைன் பாட்டில செடிக்கு மேல தொங்கவிட்டு, தண்ணிய சொட்டு சொட்டா இறங்கற மாதிரி பண்ணி விட்டுட்டாரு, பள்ளிகூடத்திலேர்ந்து திரும்பி வர வரைக்கும் தண்ணி கிடைச்சுட்டே இருக்கணுமாம் செடிக்கு!

இவருக்கு வாங்கிக்கொடுத்த வாட்ச்சும் கடிகாரங்களும் பட்ட பாடு இருக்கே! ஒரு குருவி வெளிய வந்து கத்துமே அந்த கடிகாரம் வாங்கி மாட்டிருந்தாங்க பள்ளிகூடத்துல. அது எப்புடி வெளியே வந்து கத்துது’ன்ன்மு அவரு மண்டைகுள்ள பிறாண்டிக்கிட்டே இருந்திச்சு. இரண்டு மூணு தடவை ஏறி பாக்க முயற்சி செஞ்சப்ப எல்லாம் ஏறும் போதே பிடிபட்டதுனால அந்த கடிகாரம் தப்பிச்சிது. அந்த தாகத்த அவரு தன் கடிகாரங்கள் கிட்டயே தீர்த்துக்க ஆரம்பிச்சாரு. கால்குலேட்டர் வாட்ச்’அ அக்கு வேறா ஆணி வேறா கழட்டி பொட்டலம் கட்டி வச்சிருந்திருக்காப்ல. என்னடா இப்படி பண்ணி வச்சிருக்க’ன்னு கேட்டா, அதுல எப்புடி அலாரம் அடிக்குது’னு செக் பண்ணேன்’னு பதில் வந்திருக்கு. இன்னொரு வாட்ச்சு’ல இருந்த ஸ்க்ரூ எல்லாம் இவரு ஆர்வம் தாங்காம கொஞ்ச கொஞ்சமா லூசா ஆகி கழண்டே விழுந்திருக்கு. அத சரி பண்ண ஸ்க்ரூ’வுக்கு பதிலா ஒரு கம்பிய உள்ள செருகி கட்டிட்டு ரொம்ப நாளா அட்சஸ் பண்ணிட்டு இருந்தாரு

இவரும் இவர் கும்பலும் சும்ம சுத்திட்டு இருந்த் நேரத்தில ஒரு தடவை ஓணான் மாதிரி கொஞ்சம் பெருச்சா ஒண்ணை பாத்து, அத சுருக்கு கயிறு போட்டு எப்டியோ புடிச்சு பள்ளிகூடத்துக்கு எடுத்திட்டு வந்திருக்காங்க. அத சயின்ஸ் வாத்தியார்க்கிட்ட காமிக்கவும், ‘அட, இது உடும்புடா’ன்னு ஆச்சரியப்பட்டு, இத பாடம் பண்ணி வைக்கலாம்’, நம்ம லேப்’லயே. குளோரோபார்ம் குடுத்து மயங்கவைச்சு, 10% ஃபார்மால்டிஹைட் ஊத்தி அதுக்கேத்த மாதிரி பாட்டில்ல போட்டு மூடி வைச்சுடுங்க டா’ன்னு தெரியாத்தனமா பாடம் பண்றத சொல்லிகொடுத்திட்டு போயிட்டாரு, அதுக்கப்புறம் லேப் நிரம்பி வழியுற அளவுக்கு ஓணான், வெட்டுக்கிளி, பச்சோந்தி’ன்னு சிக்குறத எல்லாம் பாடம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மிஞ்சல வீட்ல.

இந்த தண்ணித்தொட்டி’ல ஒரு குழாய போட்டு உறிஞ்சி விட்டா இன்னொரு பாத்திரத்துல எடுக்கிறத (பள்ளிக்கூடத்தில Siphon விதி சொல்லிகொடுக்கிறதுக்கு முன்னாடியே) கண்டுபுடிச்சது’ல இருந்து இந்த ஆராய்ச்சிக்கும் ஒரு அளவே இல்லாம இருந்தது. பாத்ரூம்’க்கு மேல ஒரு அண்டா’வ வச்சு அதுல தண்ணிய ஏறி ஏறி ஊத்தி, குளிக்க குளிக்க ஆட்டோமேட்டிக்’கா தண்ணி நிரம்ப வழி பாத்திருக்காரு. தண்ணிய மேல ஏறி ஊத்தி கம்பெனிக்கு கட்டுபடியாகல’ன்றதுனால நேர கிணத்துலயே நீளமான குழாய விட்டு உறியோ உறி’ன்னு உறிஞ்சிருக்காரு. முடியாம மூச்சு திணறுனதுனால அந்த முயற்சி தோல்வியடைஞ்சுது.

ஒரு நாள் டீச்சர் இங்க் ரிமூவர் பாட்டிலக் கொடுத்து சிலதை அழிச்சு தர சொல்லியிருக்காரு அவரு நோட்ல. அப்ப அதெல்லாம் வாங்கறதுக்கு ரொம்ப அதிகப்படியான விஷயம். நம்ம இங்க் ரப்பர்’ல எச்சியத்தொட்டு வரட்டு வரட்டு’னு அழிச்சு பேப்பரையே கிழிச்சிட்டு இருந்த் காலம். ஆசையா அழிச்சிட்டு இருந்தப்ப தான் அந்த வாசனை அவரை ஏதோ பண்ணிச்சு. ரொம்ப பரிச்சயப்பட்ட வாசனையா இருக்கே’னு ரொம்ப யோசிச்சு, அட, நம்ம ப்ளீச்சிங் பவுடர்’னு பல்பு எரிஞ்சுது. வீட்டுக்குப் போன உடனே ப்ளிச்சிங் பவுடர தேடி எடுத்து கொஞ்சமா தண்ணியில கரைச்சு நோட்டில தொட்டு அழிச்சா, அட, போகுது!! இதான் நம்ம இங்க் ரிமூவரா!! அத கிடைச்ச மருந்து பாட்டில்’ல எல்லாம் அடைச்சு, சாக்பீஸ் டப்பா’ல வச்சு எல்லா க்ளாஸ்’லயும் விக்க ஆரம்பிச்சிட்டாரு. இதுக்கு டெமோ பீஸ் வேற! அழிச்சு அழிச்சு இவர் கையே பொத்து போகுற நிலைமை வந்தத பார்த்திட்டு எல்லாருக்கும் தொட்டு அழிக்க இலவசமா பஞ்சும் கொடுத்தாரு. இந்த விஞ்ஞானிக்குள்ள ஒரு தொழிலதிபரும் இருந்திருக்காரு பாருங்களேன்!

இவ்வளவு ஆர்வக்கோளாறா திரிஞ்ச புள்ள இப்ப என்ன பண்ணுது’ன்னு கேட்டீங்கன்னா, சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகி ராவும் பகலுமா பொட்டியத் தட்டிகிட்டு இருக்காரு. கண்ணுல தூக்க கலக்கமும் மண்டை’ல குழப்பபுமா.

பி.கு : பொருத்த‌மான‌ ஓவிய‌ங்க‌ள் செய்து கொடுத்த‌ தோழி அனிதா மற்றும் ஏற்பாடு செய்த‌ ந‌ண்ப‌ருக்கும் நேச‌ங்க‌ளும் ந‌ன்றிக‌ளும்

Thursday, November 25, 2010

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் - என் பார்வையில்!

Nov 25 - சர்வதேச அளவிலான, பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் இன்று.

இது நிச்சயமாக பெண்ணியம் பேசும் பதிவு அல்ல. மனிதம் பேசும், பெண்ணை சக மனுஷியாய் மதிக்க, உலக அளவில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் குறித்த எனது கருத்துக்களையும் பதிய விரும்புகிறேன். அவ்வளவே.


எதற்காக இப்படி ஒரு நாள் தேவைபட்டது, அதுவும் உலகம் முழுதான ஒரு பொதுப்பிரச்சனையாக இது காணப்பட்டதன் காரணங்கள் என்ன ? இந்த நாட்டைப் பார் என எங்கேயும் உதாரணம் காட்டமுடியாத நிலை ஏன்?

உலகெங்கும் நான்கில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் என்கிறது புள்ளிவிவரம். இது குறித்தான உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையும் UNICEF’ன் அறிக்கையும் அவ்வளவு சீக்கிரம் படித்து முடிக்க முடியாது. அப்படி என்ன தான் வன்முறை இழைக்கப்படுகிறது என்று பார்த்தால் நம்ம ஊரில் பஸ்ஸில் இடிப்பதிலிருந்து காதலிக்கமறுத்ததால் ஆசிட் ஊற்றுவது வரையான ஈவ் டீஸிங் நடவடிக்கைகள் மட்டுமல்ல. ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதுமே வன்முறையின் மெல்லிய சுவடுகளாவது படர்ந்திருக்கிறது என திட்டவட்டமாக, பல நாடுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவாக சொல்லப்படுகிறது.

பொதுவாக இத்தகைய வன்முறைகளை நான்கு வகையாக பிரிக்கலாம்.

1. உடலியல் வன்முறை 2. பாலியல் வன்முறை 2. உளவியல் வன்முறை 4. பொருளாதார ரீதியிலான வன்முறை

எவ்வகையிலான வன்முறைகளை எந்தெந்த பருவங்களில் அவள் சந்திக்க நேரிடுகிறது என்று நான் பதிவை நீளமாக்க விரும்பவில்லை. விரும்பவர்கள் கூகிளில் தேடவும் அல்லது தனிமடல் இடவும், விரிவான அந்த அறிக்கைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்குள் எழுந்த சில கேள்விகளுடன் இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன். பெரும்பாலும் எளிய மற்றும் மத்திய வர்க்க குடும்பங்களுக்காகவே எழுப்பப்பட்டது போலிருக்கிறது, எனினும் -

1. எத்தனை கிராமங்களில் இன்னமும் பெண் சிசுக் கருக்கலைப்பு/பெண் சிசுக்கொலை நடைபெறுகிறது? குப்பைத் தொட்டிகளில் கிடைக்கப்பெறும் குழந்தைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகளாகவே இருப்பதன் காரணம் என்ன ?

2. எத்தனை குடும்பங்களில் பெண்களை அடிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்? எத்தனை ஆண்கள் கோபத்தில் அவள் அத்தனை முயற்சி எடுத்து சமைத்த உணவுத்தட்டுகளை எறிகின்றனர்? பின் அதை சுத்தம் செய்ய முனைகின்றனர் ?

3. இன்னமும் பல மிடில் கிளாஸ் மற்றும் அதற்கு கீழான குடும்பங்களில் ‘பெண்’ என்ற ஒரு காரணத்திற்காகவே பல விஷயங்கள் மறுக்கப்படுவது உண்மையா?

4. மிகப்பிரச்சனையான மணவாழ்க்கையில் இருந்துகொண்டு அதிலிருந்து வெளியே வரத்துடிக்கும் பெண்ணிற்கு, அவளின் உடல்/மன உளைச்சல்கள், பிரச்சனை என்னவென ஆராயாமலே ’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்பதையே கொஞ்சம் மாற்றி ‘கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போம்மா’ என்பதையே அறிவுரையாக சொல்லும் சமூகம், சமூக அந்தஸ்து இன்னமும் இருக்கிறதா ?

5. எத்தனை ஆண்கள் மனைவியின் விருப்பம் இருப்பின் மட்டுமே கலவுகின்றனர் ?

6. எத்தனை பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்? அதில் எவ்வளவு நமக்கு தெரிய வருகிறது ?

7. விதவைகளையும் விவாகரத்து ஆனவர்களையும் என்ன மாதிரியான மரியாதையில்/தரத்தில் இந்த சமூகத்தில் வைத்திருக்கிறோம்?

8. பெண்களையும் சக மனுசியாய் நினைக்க ஆண்களுக்கு குழந்தையிலிருந்தே கற்பிக்கிறோமா ?

9. அவள் 'Weaker Sex'ஆக இருக்கும் ஒரே காரணத்தினால் அவளை துன்புறுத்த தைரியம் வருகிறதா ? வீட்டுக்குள் தன் மனைவியை அடிக்கும், தங்கையை அடக்கும் ஒரு ஆண், ஒரு லோக்கல் தாதாவிடமோ அல்லது ஏதேனும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துணிவார்களா ?

10. எத்தனை ஆண்கள் போலீசாகவும் IAS, IPS போன்ற அதிகாரம் நிறைந்த பெண்கள் தங்கள் மனைவியாக வேண்டும் என்று விரும்புகிறார்கள் ? தங்களை விட அறிவிலும் அழகிலும் அந்தஸ்த்திலும் அதிகாரத்திலும் மேம்பட்ட ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு எந்தவித தாழ்வுமனப்பான்மையோ ஈகோ’வோ இல்லாமல் வாழமுடிந்திருக்கிறதா ?

11. என்ன வேண்டுமானலும் செய்துவிட்டு, கோபத்தில் செய்துவிட்டேன் எனவோ, அவளும் அப்படி செய்திருக்கக்கூடாது எனவோ தங்கள் செயலுக்கு வருந்தாமலோ உணராமலோ நியாயம் கற்பிப்போர் எத்தனைப் பேர் ?

12. இதையெல்லாம் பற்றி பேசினாலே உண்மையில் அதற்குள்ளிருக்கும் வலிகளையும் வேதனைகளையும் அறியாமல்/ அறியும் விருப்பமும் இல்லாமல்/ அறிந்தும் அறியாதது போலவும் ‘வேற வேலையே இல்ல இவங்களுக்கு’ என்று அலுத்துக்கொண்டு போகிறவர் எத்தனைப் பேர்?

நாங்கள் வளர்ந்துவிட்டோம், இதெல்லாம் அந்த காலம் என்று சொல்கிறீர்களா? உங்களை மதிக்கிறேன். ஆனாலும், IT முன்னேற்றம், கல்பனா சாவ்லா, கிரண் பேடி இவர்கள் எல்லாம் காட்டும் உலகத்தினை விடவும், நமக்கென வீட்டுக்குள் ஒரு தனி உலகம் இருக்கிறது. தனி சமுகம் இருக்கிறது. இன்னமும் IT'யோ கல்பனா சாவ்லா’வோ தெரியாத கிராமங்கள் இருக்கின்றன. நான் பெரும்பான்மை’யை முன்வைத்துப் பேசுகிறேன். சிறுபான்மையாக’வாவது இவை எல்லாம் நடப்பதில் மகிழ்ச்சியடைய வேண்டுமா எனவும் புரியவில்லை. தீர்வுக்கான கருத்துக்கள் இருந்தால் பகிருங்கள்.

டிஸ்கி : இதுக்கு மேலயும், என்னது பெண்களாவது வன்முறையாவது! எந்த காலத்துல இருக்கீங்க நீங்க. IT எவ்வளவோ டெவலப் ஆகியிருக்கு, பெண்கள் என்ன வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஆட்டோ ஒட்டுறது’ல இருந்து விண்கலம் வரைக்கும், 33% சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கோம். இன்னும் என்ன சும்மா பெண்ணியம் பேசிக்கிட்டு’ அப்படி’ன்னு நீங்க கேட்கலாம். தப்பில்லை. அப்படி கேட்டீங்க’ன்னா ஒண்ணு பாவம் உங்களுக்கு விவரம் பத்தலையா இருக்கும், அப்பாவியா இருப்பீங்க. இல்லை’ன்னா நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்’ன்னு விதண்டாவாதம் பேசுற கோஷ்டி. அதுவும் இல்லையா முளச்சு மூனு இல விடல, நீ எல்லாம் என்ன பேச வந்திட்ட, பழம் தின்னு கொட்ட போட்ட நாங்க சொல்றத கேட்டுக்க, புரியுதா’ன்னு ரொம்ப பழக்கமான பாரம்பரிய அடக்குமுறை. அட அதுவும் இல்லையா பரவலா பேச(சாட)ப்படுற ஆணாதிக்க சாயல் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கு’னு சொன்னா கோபப்படுவீங்க. அப்படியெல்லாம் இல்ல இதுவரைக்கும் எந்த பொண்ணையும் நான் தரக்குறைவா பாத்ததில்ல நடத்தினதில்லை, பொண்டாட்டியா இருந்தாலும் கைநீட்டி அடிச்சதில்லை. அவ விருப்பமில்லாம தொட்டதில்லை’னு சொல்லுங்க. தெய்வம் நீங்க. இது கண்டிப்பா உங்களுக்கு இல்லை .




Sunday, November 21, 2010

ஆப்பி பர்த்டே !!!

இன்றும் ஒரு நெருங்கிய நண்பரின் பிறந்தநாளை மறந்துவிட்டேன். வழக்கமானது தான். நாட்களை நினைவில் வைத்துக்கொள்வதில் மிக பலவீனமாகத் தான் இருந்துகொண்டிருக்கிறேன். ஒன்றும் சொல்வதற்கு இல்லை. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுப்பியோ சொல்லியோ நான் ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். இப்படி மறந்துவிட்டு அசடு வழிகிறேனே என்று என் மேலேயே கோபமாக வந்தது. என் பிறந்த நாள் அன்று கண்டிப்பாய் வாழ்த்து சொல்வார்களென்று நினைத்திருந்த சிலர் இதே போல் அடியோடு மறந்த போது எழுந்த லேசான ஏமாற்றமும் நினைவுக்கு வந்தது.


ஒரு காலத்தில் பிறந்த நாள் வருவதற்காய் வருடம் முழுதும் காத்திருந்த நினைவுகள் மெல்ல விரிந்தது. தீபாவளிக்கு ஒன்றும் பிறந்த நாளுக்கு ஒன்றுமாய் இரண்டு புதுத்துணிகள் கிடைக்கும் வருடத்திற்கு. மிக முக்கியமான நாட்களில் ஒன்று. அது இல்லாமல் புதுத்துணிக்கேற்ப பாசிகளும் வளையல்களும் கூட, எப்போதாவது செருப்பு போன்ற விஷயங்களும் சேர்ந்துகொள்ளும். பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பே பரபரப்பு தொற்றிக்கொள்ளும். கிடைக்கும் எல்லாவற்றையும் வாங்கியாக வேண்டுமே. என்ன வாங்குவது எப்படி வாங்குவது என்ற சிந்தனையிலேயே தூக்கம் கூட சரியாக வராது. எப்படியும் எல்லாம் நான் தேர்ந்தெடுப்பதும் கிடையாது, சமயத்தில் அப்பாவே வாங்கி வந்து விடுவார். அதற்கே இந்த நிலை!

மார்கழி மாதத்தில் வரும் பிறந்தநாள். நினைத்தாலே அதிகாலை குளிரும் தெருக்கோடியில் ஒலிக்கும் கோயில் பாடல்களும் மெல்ல வருடிச்செல்லும். இருள் விலகாத அதிகாலையில் அம்மா எழுப்பும் போதே வாழ்த்துடன் ஆரம்பிக்கும். இதமான வெந்நீரில் தலைக்குக் குளித்து, புதுத்துணியின் வாசம் நெஞ்சம் நிறைய உள்ளிழுத்து அணிந்து, மற்ற புதுசுகளையும் சூடி ஈரப்பின்னல் போட்டு அப்பாவைப் போய் எழுப்பி ‘ஹேப்பி பர்த்டே’ சொல்ல வேண்டும். ஆமாம். அப்பாவுக்கும் எனக்கும் ஒரே நாளில் தான் பிறந்தநாள். அவரிடமிருந்து பதில் வாழ்த்தும் முத்தமும் பெற்ற பின் பெருமிதமும் உற்சாகமும் பீறிட்டு கிளம்ப பள்ளி செல்ல வேண்டியது தான். வகுப்பாசிரியர் வரும் வரை காத்திருக்கமுடியாமல் காத்திருந்து. வந்தவுடன் எழுந்து ஒடி, கையோடு எடுத்து சென்றிருக்கும் சாக்லேட் டப்பாவினை நீட்டி அவரிடமும் வாழ்த்துகள் வாங்கிய பின் முக்கியமான தருணத்துக்குள் அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும்.

எல்லாருக்கும் முன் நிற்க வைத்து ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ பாடுவார்கள். கூச்சமும் சிரிப்பும் சந்தோஷமுமாய் முதல் வரிசையில் தொடங்கி அனைவருக்குமாய் சாக்லேட் விநியோகம் ஆரம்பிக்கும். சிலர் கைகொடுப்பார்கள். சிலர் வாய் வார்த்தையில். சிலர் நன்றியுடன் முடித்து கொள்வர். வெகு சிலர் அதுவும் இல்லாமல் தன் பங்கை மட்டும் எடுத்துகொள்வதும் நடக்கும். இந்த சாக்லேட் விஷயமும் ஒன்றும் சாதரணமானதில்லை. அது தான் அன்று நம் அந்தஸ்த்தின் அடையாளம்! காட்பரீஸ்’இல் இருந்து புளிப்பு மிட்டாய் வரையிலான ரேஞ்சில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதும் முன்பே தீர்மானிக்க படவேண்டிய ஒன்று. ஒரு மாதிரி நியூட்ரின்‘ஆசை’ யில் வந்து முடியும் நம் தீர்மானம்.(புளிப்பு மிட்டாய்க்கு கொஞ்சம் மேல் :)) அதை சாப்பிட்டபின் சுற்றியிருக்கும் காகிதத்தை ரப்பர் போல இரண்டு பேர் இழுத்து விளையாடலாம். அதையும் ஒரு காரணமாகக் கொண்டு அதையே முடிவு செய்ய மனதை தேற்றிக்கொண்டிருக்கிறேன்.

மாலையில், அப்பா ஏதாவது கேக் வாங்கி வந்திருப்பார். எங்களுக்கே எங்களுக்காய் ஒரு எக்ஸ்க்ளூசிவ் ஆனால் மிக எளிய ஒரு கொண்டாட்டம். பின்னர் அக்கம்பக்கத்தினர், உறவினர் என்று ஒரு சுற்று நடக்கும். பெரியவர்கள் இருந்தால் காலில் விழுவதில் நம் பணிவுக்கு அளவே இல்லாமல் இருக்கும். கிடைத்ததை வசூல்(!) செய்துகொண்டு கொஞ்ச நாள் குஷியாக ஓடும். இவை இல்லாமல், அன்று பள்ளியிலும் வீட்டிலும் தனி சலுகை கிடைக்கும். எதற்கும் திட்டோ அடியோ விழாது. ஏன் வருடத்திற்கு ஒரு முறை தான் வருகிறது என வருத்தமும் அடுத்த பிறந்தநாளிற்கான காத்திருப்புமாய் தான் அன்றைய நாள் முடியும்.

எனது ஐந்தாவது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன் அமைந்தது, அப்பாவின் முதல் சிங்கப்பூர் பயணம். மனதே இல்லாமல் கிளம்பிய அப்பா அங்கே இறங்கியவுடன் அம்மாவுக்கு எழுதிய கடிதம் இன்னமும் இருக்கிறது. புதுத்துணி, சாக்லேட் பற்றி கூட அதில் எழுதியிருப்பார்.! அப்பா அன்று இல்லாத குறை எனக்கு தெரியக்கூடாது என்பதற்காய் நண்பர்கள் சிலர் வந்து கேக் வெட்ட சொல்லி கொண்டாடியது இன்னமும் நினைவு கூரும் நிகழ்வு.. இன்று அவர் இல்லாமல் எத்தனையோ பிறந்தநாட்கள் கழிந்துவிட்டன. எப்படியும் என்னை வந்தடையும் ஒவ்வொரு வாழ்த்திலும் அப்பாவின் புன்னகை நினைவில் நிழலாடுவதை நினைத்துப் பார்க்கிறேன்.

அந்த வயதில் தன் பிறந்தநாளே தெரியாது என சொன்ன சிலரை ஆச்சரியத்தோடு பார்த்திருக்கிறேன். அதெப்படி பிறந்தநாளே தெரியாமல், பிறகெப்படி கொண்டாடுவீர்கள் என்ற எனது கேள்விக்கு நமக்கென்ன கொண்டாடவேண்டியிருக்கு என அவர்களின் அந்த சலிப்பு புரிவதற்கு பல வருடங்கள் வேண்டியிருக்கிறது. வர வர பிறந்தநாள் வந்தாலே ஒரு வயது ஏறிவிடுகிறது ,இன்னும் என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கிறது என்றெல்லாம் தான் யோசிக்கத் தோன்றுகிறது. எனக்கு இன்னிக்கு ’ஆப்பி பர்த்டே’ என்று வாயெல்லாம் பல்லுடன், புதுத்துணியும் வரும் பொடிசுகளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

இந்த பிறந்தநாளை மறந்த விஷயத்திற்கு வருவோம். எத்தனைப் பேரின் பிறந்தநாளை நினைவு வைத்திருக்கிறேன் என கணக்கெடுத்தால் என் டெபாசிட் காலி. இன்னமும் என் பிறந்தநாளன்று தவறாமல் வாழ்த்தும் மிக நெருங்கிய சிலரின் பிறந்தநாளே தெரியாமல் இருக்கிறேன் என்பது அதைவிடவும் வெட்கக்கேடு. இந்த அவமானத்தோடே இது வரை நான் வாழ்த்தாமல் போன அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்களையும் நேசங்களையும் பரிமாறிக்கொள்கிறேன். என்னை திருத்திகொள்ள முழுமுயற்சி எடுப்பேன் என்றும் இதன் மூலம் உறுதியளிக்கிறேன்!!! :) :) :)

Thursday, October 14, 2010

சயாம் மரண ரயில் - மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!

எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார். அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.

இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது. அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.

அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர். சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர். இதற்காக பெருமளவில் ஆசியதொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது. ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.
போரினால் கடும் பஞ்சம் வேறு. உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai" என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன. நம் பாடு தான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன. எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது. இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.

ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவு உண்மை என உணரமுடிகிறது. அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டுபிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர். அதனூடே ஒரு மெல்லிய காதல் கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே!!)..

மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான். முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம். எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும்
குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.

ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள்,, மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது கதை. இரண்டு பெரிய குன்றுகளை வெட்டி சாய்த்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதைப் படிக்கும் போது, லேசாய் பயம் பற்றிக் கொள்கிறது. அங்கேயும் சந்தடி சாக்கில்
சின்ன சின்ன பலசரக்குகளை வாங்கி முகாம்களின் உள்ளேயே வியாபாரம் பண்ணிய நமது மக்களின் திறமையை நினைத்து பெருமைப்படுவதா வேதனைப்படுவதா எனப் புரியவில்லை.

இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது. சான்றுகளுக்கும் மேல்விவரங்களுக்கும் கூகிள் செய்ததில், சமீபமாக இன்னொரு புத்தகமும், அதன் வரலாறை அப்படியே சொல்ல வந்திருப்பது தெரிய வந்தது. அதற்கான தகவல்களும் சுட்டிகளும் முடிவில்.

இந்த பதிவின் மூலமாக உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் சார்பாகவும், இந்த களத்தில் உயிர்துறந்த அப்பாவித் தமிழர்களுக்கும் பிற நாட்டவர்க்கும் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். மேலும் புலம் பெயர்ந்து தங்கள் முகம் தொலைத்து முகவரி இழந்து தவிக்கும் அத்தனை தமிழருக்கும் இப்பதிவினை அர்ப்பணிக்கிறேன்.

இப்புத்தகத்தின் விவரம் :
சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்
ஆசிரியர் : சண்முகம்
தமி​ழோசை பதிப்​ப​கம்,​​
21/8,​ கிருஷ்ணா நகர்,​​ மணி​ய​கா​ரம்​பா​ளை​யம் சாலை,​​ கண​பதி,​​ கோய​முத்​தூர்-​641 012.​ ​
தொலை பேசி - 9486586388, விலை ரூ 150.

இதே பதிப்பகத்தின் சமீபத்திய இன்னுமொரு நூல் -
சயாம்-​பர்மா மரண ரயில்​பாதை மறக்​கப்​பட்ட வர​லாற்​றின் உயிர்ப்பு -​ சீ.அருண்;​ பக்.224; ரூ.130

மேல்விவர சுட்டிகள் :

http://en.wikipedia.org/wiki/Burma_Railway
http://www.far-eastern-heroes.org.uk/Reg_Rainer_Returns/html/death_railway.htm
http://www.cofepow.org.uk/pages/asia_thailand1.html

Related Posts with Thumbnails