Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Tuesday, March 8, 2011

இன்று மகளிர் தினம்!

எனக்குத் தெரிந்து சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இங்கே பெண்கள் தினம் என ஒன்று இருப்பது பரவலாகத் தெரிய வந்தது. அதிலிருந்து அன்றைய தினம் அலைபேசி குறுஞ்செய்திகளும் மின்மடல்களும் அழைப்புகளுமான வாழ்த்துக்களுடனே நன்றாகத் தான் செல்கின்றன. பெண்கள் தினத்திற்கென பிரத்யேக விற்பனைகளும் வந்தாயிற்று. ஆடைகளிலிருந்து கணிப்பொறி வரை. தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், அலுவலகத்தில் கொண்டாட்டங்கள், போட்டிகள் என அதற்கும் குறைவில்லை.

இதுவும் மேலை நாட்டுக் கலாச்சாரம் என கொடி பிடிப்பவர்களும், ந‌ம் நாட்டில் என‌ பெண்க‌ளுக்கு என்ன‌ ம‌ரியாதைக்குறைவு இருக்கிற‌து ? பிர‌தான‌ ந‌தியில் இருந்து பிர‌த‌ம‌ ம‌ந்திரியை இய‌க்குப‌வ‌ர் வ‌ரை பெண்க‌ள் தானே என‌ வாதிடுபவ‌ர்க‌ளும் இன்ன‌மும் என்ன‌ பெண்க‌ள், பெண்க‌ள் பிர‌ச்ச‌னை என்று பேச இருக்கிற‌து, இப்போது தான் எல்லாத் துறையிலும் வ‌ந்துவிட்டார்க‌ளே என‌ ச‌லித்துக்கொள்வ‌ர்க‌ளும் பெண்க‌ள் குறித்தான‌ பிர‌ச்ச‌னைக‌ளின் அல‌ச‌லை தொலைக்காட்சியில் எப்போதாவது காண‌ நேர்ந்தாலும் உடனே சான‌லை மாற்றிவிடுப‌வ‌ர்க‌ளும் இருந்துகொண்டு தான் இருக்கிறார்க‌ள்.

ஒரு புற‌ம், சென்ற நூற்றாண்டின் கடைசி பத்து இருபது வருடங்களுடன் ஒப்பிட்டாலே, மிக‌ மிக‌ அசாத‌ர‌ண‌மான‌ வ‌ள‌ர்ச்சியை காண‌முடிகிற‌து பெண்க‌ளிட‌ம். இன்னொருபுற‌ம், பெண்க‌ள் மீதான‌ வ‌ன்முறை நிகழ்வுகள் ஒவ்வொரு மூன்று நிமிட‌ங்க‌ளுக்கு ஒருமுறை நிக‌ழ்த்த‌ப்ப‌டுகிற‌து. ஏனிந்த‌ முர‌ண்பாடு. ந‌ட‌ப்ப‌தில் எதை ந‌ம்புவ‌து. எந்த செய்தித்தாளையேனும் எடுத்து வாசித்துப்பார்த்தால் எந்த மூலையிலேனும் பெண்கள் சாதித்த கதை தெரியலாம். பரவலாகத் தெரிவது என்ன என சற்றுப் பொறுமையாக புரட்டிப்பார்த்தால், எத்தனை எத்தனை சிக்கல்கள் பெண்ணாய் இருப்பது என்ற ஒரே காரணத்தினால்.

இன்று ஒரு நீதிமன்ற தீர்ப்பு. கோமாவில் இருக்கும் அறுபது வயதாகும் ஒரு மூதாட்டியை கருணைக்கொலை செய்ய நீதின்றம் மறுப்பு. அதிலென்ன சிக்கல்? நல்ல தீர்ப்பு தானே என யாரும் யோசிக்கும் முன்னரே தொடர்கிறது அவரின் கதை. நர்ஸ்‘ஆக வேலை செய்து வந்த அவர் இருபத்துமூன்று வயதில் ஒரு துப்புரவுத் தொழிலாளியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகினார்.அவர் எதிர்க்கக்கூடாது என்பதற்காக நாய்களை கட்டும் இரும்புச் சங்கிலியில் அவர் கழுத்தை நெரித்திருக்கிறான். மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு இத்தனை வருடங்களாக கோமாவில் கழிக்கும் அவரது வாழ்க்கையின் அவலம். கருணைக்கொலை செய்ய விண்ணப்பிக்கும் அளவு சென்றுவிட்ட அவரின் சுற்றுப்புறம். அவர் தொலைத்தது என்ன? இத்தனை வருட வாழ்க்கை. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பிஞ்சு பெண் குழந்தைகளைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்த்தால், அவர் வருங்காலம் எத்தனைக் கேள்விக்குறியானது எனப்புரியும். மனரீதியாக அவர்களின் பாதிப்புகள் மட்டுமே அதன்பின் அவர்களின் வாழ்க்கைமுறையை பெரிதும் பாதித்துவிடுகின்றன.

வெளியே தெரிவது மிகச்சில. யாரும் அறியாமல் நிகழ்த்தப்படும் கொடூரங்கள் பலப்பல. யாரும் அறியாமல் சிந்தப்படும் பெண்களின் கண்ணீர்த்துளிகளும் பல கோடி.மேற்கூறிய கடைநிலை வக்கிரங்கள் இல்லாமல், மிகச் சாதரணமாக நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் பற்றி தனியே சொல்லவேண்டுமா என்ன ? பொது இடங்களில் உரசும் உடல் ரீதியான செயல்களில் இருந்து மிக நுணுக்கமான உணர்வு ரீதியிலான செயல்கள் வரை, ஒன்றா இரண்டா ?

படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லாமல் பொருந்தக்கூடிய சில விஷயங்கள் இவை. எத்தனைப் பெண்கள் “இதெல்லாம் தேவையில்லை உனக்கு” என்ற தன் குடும்பத்தின் கருத்துக்காக தங்கள் ஆசையை கனவுகளை நொறுங்கக்கொடுத்து வந்திருக்கிறார்கள். எத்தனைப் பெண்களின் நட்புவட்டங்கள் கணவனுக்குப் பிறகு காணாமலேயே போய்விடுகின்றன. எத்தனை பெண்களின் சின்ன சின்ன ஆசைகள் கூட அநாவசியமாய் அவசியமற்றதாய் ஒதுக்கப்படுகின்றன. பெண்களாய் இருப்பதன் ஒரே காரணத்தினால் இளக்காரமாகப் பார்க்கப்பட்ட தருணங்கள் எத்தனை. அவளை நோக்கி வீசப்படும் கேள்விகள் எத்தனை. துளைக்கும் பார்வைகள் எத்தனை. அத்தனையையும் விட்டுக்கொடுத்து அவர்களையும் புன்னகையுடன் அரவணைத்துச் செல்லும் பெண்கள் எத்தனை பேர்.

நேற்றுப்படித்த அஜயன்பாலாவின் கட்டுரை ஒன்று மிகப்பாதித்தது. ஆடை விஷயங்களில் இன்னமும் கட்டுப்பாடுகளைச் சந்திக்கும் பெண்களின் மனநிலை. அரைகுறையாய் செல்வது சுதந்திரமா என வாதிக்க நான் இங்கே விரும்பவில்லை. இது அதைப் பற்றினதும் இல்லை. மிகச்சாதாரண ஒரு விஷயத்திற்குக்கூட ஒரு வரைமுறைகளின் கீழ் அடக்கியே வைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் மனநிலையிலிருந்து படித்துப் பாருங்கள் புரியும்.

குளிரூட்டப்பட்ட எல்லா வசதியும் நிறைந்த ஒரு அலுவலகத்தின் கணினியில் இதனை தட்டச்சுவது மிகச்சுலபமானது தான். அத்தனையையும் அனுபவித்து/ அதையே வாழ்க்கையாகக் கொண்டு/ அதிலிருந்து மீண்டு/ குடும்பத்திற்காக உழைத்து/ அதற்கு மேலும் ஒரு நிலையை அடைந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியான பெருமிதமான பெண்கள் தின வாழ்த்துகள். இன்னமும் நாம் வாழும் சமுதாயம் பெண்களுக்கு என சில புரிதல்களைக் கொள்ளும் பெண்கள் தினமும் வருங்காலத்தில் வரும் என்ற நம்பிக்கையோடு.

வாழ்த்து தெரிவித்த‌ அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் ந‌ன்றிக‌ள். உங்க‌ள் வாழ்த்துக‌ளின் பின்னால் உள்ள‌ அன்பும் பெண்கள் மீதான மரியாதையும் வ‌ருங்கால‌த்தை ந‌ம்பிக்கையூட்டுவ‌தாய் ஆக்குகின்றன.

வெளியிட்ட கீற்று.காம்’க்கு நன்றி.

Thursday, November 25, 2010

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் - என் பார்வையில்!

Nov 25 - சர்வதேச அளவிலான, பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் இன்று.

இது நிச்சயமாக பெண்ணியம் பேசும் பதிவு அல்ல. மனிதம் பேசும், பெண்ணை சக மனுஷியாய் மதிக்க, உலக அளவில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் குறித்த எனது கருத்துக்களையும் பதிய விரும்புகிறேன். அவ்வளவே.


எதற்காக இப்படி ஒரு நாள் தேவைபட்டது, அதுவும் உலகம் முழுதான ஒரு பொதுப்பிரச்சனையாக இது காணப்பட்டதன் காரணங்கள் என்ன ? இந்த நாட்டைப் பார் என எங்கேயும் உதாரணம் காட்டமுடியாத நிலை ஏன்?

உலகெங்கும் நான்கில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் என்கிறது புள்ளிவிவரம். இது குறித்தான உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையும் UNICEF’ன் அறிக்கையும் அவ்வளவு சீக்கிரம் படித்து முடிக்க முடியாது. அப்படி என்ன தான் வன்முறை இழைக்கப்படுகிறது என்று பார்த்தால் நம்ம ஊரில் பஸ்ஸில் இடிப்பதிலிருந்து காதலிக்கமறுத்ததால் ஆசிட் ஊற்றுவது வரையான ஈவ் டீஸிங் நடவடிக்கைகள் மட்டுமல்ல. ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதுமே வன்முறையின் மெல்லிய சுவடுகளாவது படர்ந்திருக்கிறது என திட்டவட்டமாக, பல நாடுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவாக சொல்லப்படுகிறது.

பொதுவாக இத்தகைய வன்முறைகளை நான்கு வகையாக பிரிக்கலாம்.

1. உடலியல் வன்முறை 2. பாலியல் வன்முறை 2. உளவியல் வன்முறை 4. பொருளாதார ரீதியிலான வன்முறை

எவ்வகையிலான வன்முறைகளை எந்தெந்த பருவங்களில் அவள் சந்திக்க நேரிடுகிறது என்று நான் பதிவை நீளமாக்க விரும்பவில்லை. விரும்பவர்கள் கூகிளில் தேடவும் அல்லது தனிமடல் இடவும், விரிவான அந்த அறிக்கைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்குள் எழுந்த சில கேள்விகளுடன் இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன். பெரும்பாலும் எளிய மற்றும் மத்திய வர்க்க குடும்பங்களுக்காகவே எழுப்பப்பட்டது போலிருக்கிறது, எனினும் -

1. எத்தனை கிராமங்களில் இன்னமும் பெண் சிசுக் கருக்கலைப்பு/பெண் சிசுக்கொலை நடைபெறுகிறது? குப்பைத் தொட்டிகளில் கிடைக்கப்பெறும் குழந்தைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகளாகவே இருப்பதன் காரணம் என்ன ?

2. எத்தனை குடும்பங்களில் பெண்களை அடிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்? எத்தனை ஆண்கள் கோபத்தில் அவள் அத்தனை முயற்சி எடுத்து சமைத்த உணவுத்தட்டுகளை எறிகின்றனர்? பின் அதை சுத்தம் செய்ய முனைகின்றனர் ?

3. இன்னமும் பல மிடில் கிளாஸ் மற்றும் அதற்கு கீழான குடும்பங்களில் ‘பெண்’ என்ற ஒரு காரணத்திற்காகவே பல விஷயங்கள் மறுக்கப்படுவது உண்மையா?

4. மிகப்பிரச்சனையான மணவாழ்க்கையில் இருந்துகொண்டு அதிலிருந்து வெளியே வரத்துடிக்கும் பெண்ணிற்கு, அவளின் உடல்/மன உளைச்சல்கள், பிரச்சனை என்னவென ஆராயாமலே ’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்பதையே கொஞ்சம் மாற்றி ‘கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போம்மா’ என்பதையே அறிவுரையாக சொல்லும் சமூகம், சமூக அந்தஸ்து இன்னமும் இருக்கிறதா ?

5. எத்தனை ஆண்கள் மனைவியின் விருப்பம் இருப்பின் மட்டுமே கலவுகின்றனர் ?

6. எத்தனை பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்? அதில் எவ்வளவு நமக்கு தெரிய வருகிறது ?

7. விதவைகளையும் விவாகரத்து ஆனவர்களையும் என்ன மாதிரியான மரியாதையில்/தரத்தில் இந்த சமூகத்தில் வைத்திருக்கிறோம்?

8. பெண்களையும் சக மனுசியாய் நினைக்க ஆண்களுக்கு குழந்தையிலிருந்தே கற்பிக்கிறோமா ?

9. அவள் 'Weaker Sex'ஆக இருக்கும் ஒரே காரணத்தினால் அவளை துன்புறுத்த தைரியம் வருகிறதா ? வீட்டுக்குள் தன் மனைவியை அடிக்கும், தங்கையை அடக்கும் ஒரு ஆண், ஒரு லோக்கல் தாதாவிடமோ அல்லது ஏதேனும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துணிவார்களா ?

10. எத்தனை ஆண்கள் போலீசாகவும் IAS, IPS போன்ற அதிகாரம் நிறைந்த பெண்கள் தங்கள் மனைவியாக வேண்டும் என்று விரும்புகிறார்கள் ? தங்களை விட அறிவிலும் அழகிலும் அந்தஸ்த்திலும் அதிகாரத்திலும் மேம்பட்ட ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு எந்தவித தாழ்வுமனப்பான்மையோ ஈகோ’வோ இல்லாமல் வாழமுடிந்திருக்கிறதா ?

11. என்ன வேண்டுமானலும் செய்துவிட்டு, கோபத்தில் செய்துவிட்டேன் எனவோ, அவளும் அப்படி செய்திருக்கக்கூடாது எனவோ தங்கள் செயலுக்கு வருந்தாமலோ உணராமலோ நியாயம் கற்பிப்போர் எத்தனைப் பேர் ?

12. இதையெல்லாம் பற்றி பேசினாலே உண்மையில் அதற்குள்ளிருக்கும் வலிகளையும் வேதனைகளையும் அறியாமல்/ அறியும் விருப்பமும் இல்லாமல்/ அறிந்தும் அறியாதது போலவும் ‘வேற வேலையே இல்ல இவங்களுக்கு’ என்று அலுத்துக்கொண்டு போகிறவர் எத்தனைப் பேர்?

நாங்கள் வளர்ந்துவிட்டோம், இதெல்லாம் அந்த காலம் என்று சொல்கிறீர்களா? உங்களை மதிக்கிறேன். ஆனாலும், IT முன்னேற்றம், கல்பனா சாவ்லா, கிரண் பேடி இவர்கள் எல்லாம் காட்டும் உலகத்தினை விடவும், நமக்கென வீட்டுக்குள் ஒரு தனி உலகம் இருக்கிறது. தனி சமுகம் இருக்கிறது. இன்னமும் IT'யோ கல்பனா சாவ்லா’வோ தெரியாத கிராமங்கள் இருக்கின்றன. நான் பெரும்பான்மை’யை முன்வைத்துப் பேசுகிறேன். சிறுபான்மையாக’வாவது இவை எல்லாம் நடப்பதில் மகிழ்ச்சியடைய வேண்டுமா எனவும் புரியவில்லை. தீர்வுக்கான கருத்துக்கள் இருந்தால் பகிருங்கள்.

டிஸ்கி : இதுக்கு மேலயும், என்னது பெண்களாவது வன்முறையாவது! எந்த காலத்துல இருக்கீங்க நீங்க. IT எவ்வளவோ டெவலப் ஆகியிருக்கு, பெண்கள் என்ன வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஆட்டோ ஒட்டுறது’ல இருந்து விண்கலம் வரைக்கும், 33% சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கோம். இன்னும் என்ன சும்மா பெண்ணியம் பேசிக்கிட்டு’ அப்படி’ன்னு நீங்க கேட்கலாம். தப்பில்லை. அப்படி கேட்டீங்க’ன்னா ஒண்ணு பாவம் உங்களுக்கு விவரம் பத்தலையா இருக்கும், அப்பாவியா இருப்பீங்க. இல்லை’ன்னா நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்’ன்னு விதண்டாவாதம் பேசுற கோஷ்டி. அதுவும் இல்லையா முளச்சு மூனு இல விடல, நீ எல்லாம் என்ன பேச வந்திட்ட, பழம் தின்னு கொட்ட போட்ட நாங்க சொல்றத கேட்டுக்க, புரியுதா’ன்னு ரொம்ப பழக்கமான பாரம்பரிய அடக்குமுறை. அட அதுவும் இல்லையா பரவலா பேச(சாட)ப்படுற ஆணாதிக்க சாயல் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கு’னு சொன்னா கோபப்படுவீங்க. அப்படியெல்லாம் இல்ல இதுவரைக்கும் எந்த பொண்ணையும் நான் தரக்குறைவா பாத்ததில்ல நடத்தினதில்லை, பொண்டாட்டியா இருந்தாலும் கைநீட்டி அடிச்சதில்லை. அவ விருப்பமில்லாம தொட்டதில்லை’னு சொல்லுங்க. தெய்வம் நீங்க. இது கண்டிப்பா உங்களுக்கு இல்லை .




Related Posts with Thumbnails