Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Thursday, September 22, 2011

காகிதப்பூக்களின் நிறமெழுதும் வாசம்…[1]

நாம் பேசிக்கொள்ள இன்னமும் நிறைய மிச்சம் இருக்கிறது.

பேசி பேசித் தீர்த்த பொழுதுகளின் வாசம் மெல்ல காற்றில் கரைந்துகொண்டிருக்கிறது. அதை தக்க வைக்க என்னாலான‌தை முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றிலும் ஒரு மெளனச்சுவர் மெல்ல எழும்புகிறது. என்னை மீறி இடமற்ற, யாரும் உள்நுழைய முடியாத கூடாய் அது உருவாகிறது. மகிழ்ச்சியாய் அதனுள் சிறைப்பட எத்தனித்து கொண்டிருக்கிறேன். மெளனமும் இருளும் தனிமையும் கொண்டு அதனை நிரப்புகிறேன். மெளனம் அனைத்திற்கும் தீர்வாக இருக்கும் என நம்புகிறேன். அதுவும் தவறு தான் என உடைத்துப் போகிறாய்.

வார்த்தைகளற்ற பெருவெளி ஏதோ ஒன்றில் அறியாமல் நாம் சிக்கிக்கொண்டிருக்கவேண்டும். உன்னை நோக்கி குவிந்த வார்த்தைகள் எங்கேயோ விரைந்து மறைகின்றன. ஆடம்பரமாக்க பட்ட வார்த்தைப்பெருவெளிகளில் பஞ்சத்தில் அடிபட்ட ஏழ்மையின் குடியாக மாறிக்கொண்டிருக்கிறோம். உறியில் மிச்சம் இருக்கும் ஒன்றிரண்டு அரிய சொற்களும் பரிதாபமாக கொள்ளையடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. உணர்வுகளையும் வருத்தங்களையும் கோபங்களையும் ஓரிரு சத்தங்களில் வெளிக்காட்டுவதோடு நம் பரிமாற்றங்கள் முடிவடைந்துக்கொண்டிருக்கின்றன.

புன்னகைகளும் உற்சாகங்களும் ஊற்றெனப் பெருக்கெடுத்து ஓடிய காலங்கள் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துகொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்த செல்கள் மீண்டும் மரணிக்கத் தொடங்கிவிடுவதைப் போல கூக்குரல் இடுகின்றன. உயிர்ச்சூடளித்து என்னை அடைகாத்த அடர்ந்த கருஞ்சிறகுகளின் இறகுகள் மெல்ல உதிர்ந்துவிடுவதைப் போல ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. பின்னிப் பிணைந்த பாம்புகளைப் போல் கிடந்த நம் பாதச்சுவடுகளின் பாதை தண்டவாளங்களைப் போல் தனித்தனியாய் நீண்டுகொண்டிருக்கிறது. காதலாய் நிகழும் சந்திப்புகள் சலிப்பிற்குரிய கடமைகளாய் மாறத்தொடங்குகிறது. சிரிப்புக்களை இடம் மாற்றிவிட்டு சலிப்புக்களும் வெறுப்புகளும் கோபங்களும் குடிகொள்ளத் தொடங்கிவிட்டன.

கட்டி எழுப்பப்பட்ட எனது கனவு தேசங்கள் அனைத்தும் கேள்விக்குறிகளாய் மாறுகின்றன. அதன் கூரிய வளைவுகளில் என் கழுத்தைச் சுற்றி கருணையே இல்லாமல் என்னை இழுத்துப் போகின்றன. மிகுந்த அலறல்களின் இடையில் என்னை பள்ளாத்தாக்கின் மேலிருந்து விடுவிக்கின்றன. விழுந்து கொண்டே இருக்கையில் விழிக்கிறேன். விழித்து விழித்து பின் மீண்டும் வீழ்கிறேன்.

தேவதைக்கதைகளில் வரும் ஏழுகடல்கள் ஏழுமலைகள் தாண்டி இருக்கும் அரக்கனின் காவலில் உள்ள கிளியின் உயிரை போன்றதாகிவிட்டது நம் பிரியங்கள். அரியது போல, மிக மிக வேண்டப்பட்டது போல, பல போர்களை தூண்டும் வேட்கை போல, மனிதத்தின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் மெல்லிய வன்மங்களைப் போல, இடம் மாறினாலும் நிறம் மாறினாலும் அடையாளம் மாறாத அதே பிரியங்கள். எங்கேனும் யாரேனும் பரிசளிக்கும் ஒரு மந்திர வாளோ பறக்கும் மந்திர கம்பளமோ கிடைத்துவிடாதா சிறைப்பட்டிருக்கும் என் பிரியத்துக்குரிய நேசங்களை மீட்க என்ற ஏக்கத்துடன் கூடிய மெல்லிய நம்பிக்கையின் ரேகை ஒன்று ஆயுள் ரேகையை தாண்டிச் செல்கிறது என் உயிர்த்திருத்தலின் நோக்கங்களை எடுத்துக்கூறியபடி.

வேறு வேறு கூடுகள். வேறு வேறு எல்லைகள். தொடுவானங்கள் அவரவர் திசைகளிலும் வெவ்வேறு தூரங்களிலும். எனினும் ஒரே உலகத்தில் தானே சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது நம் உடல்களும் உயிரும். அதுவும் நமக்கு மட்டுமேயான உலகமாய் மாறிவிடும் என்ற கனவுகளுடன் இப்போது கலைந்து போகிறேன்.

நாம் பேசிக்கொள்ள இன்னமும் நிறைய மிச்சம் இருக்கிறது…

Saturday, February 12, 2011

காதல் மட்டும் புரிவதில்லை !!! [காதலர் தினப் பதிவு] பகுதி 1


உலகத்தில் உயிரினங்கள் எத்தனையோ கோடி. ஒவ்வொன்றும் ஒரு வகை ஆனாலும் அத்த‌னைக்கும் அடித்தளம் காத‌ல். காம‌த்தின் இறுகிய‌பிடியை மென்மையாய் மாற்றும் ம‌ந்திர‌ம். பொங்கி வரும் அன்பின் பிரவாகம். ஹார்மோன்களின் கிளர்ச்சி. அகமோ புறமோ தேவைகளைப் பூர்த்தி செய்யும் வடிகால். தத்தளித்து தவிக்கையில் கிடைக்கும் ஒரு கிளை. இன்னொரு தாய்ம‌டி. அத்த‌னை உற‌வுக‌ளின் ஒரே வ‌டிவ‌ம். நம்மையே செதுக்கிக்கொள்ள‌ கிடைக்கும் உளி. சிற‌க‌டித்து ப‌ற‌க்க‌ ஒரு இற‌க்கை. ஏறிக்கொண்டே இருக்கும் போதை.

பாலையில் விழும் ம‌ழைத்துளி. பல வண்ண வானவில். பாளமாய் வெடித்து இருக்கும் நில‌த்தில் துளிர்விடும் விதை. தேவ‌தைக் க‌தைக‌ளின் கொடுக்கப்படும் வ‌ர‌ம்.தாய்மையைப் போல் தூய்மையான, தன்னலமற்ற அன்பு படர்ந்து விரியும் வற்றாத காட்டருவி. இரவின் மழை. தவழும் குழந்தையின் நடை பழகல். மழலைச் சிரிப்பில் வடியும் எச்சில். முதல்முறையாய் கடற்கரையைப் பார்ப்பவனின் குதூகலம். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம்.

திருடித் தின்ற‌ அடிக்க‌ரும்பின் இனிப்பாய் நாக்கில் தித்திக்கும் க‌ள்ள‌த்த‌ன‌மான‌ இனிப்பாய்த் தான் முத‌லில் ஆர‌ம்பிக்கிற‌து காத‌ல். காத‌லிக்க‌ப்படுபவருக்கே கூட‌த் தெரியாம‌ல்! காத‌லிப்ப‌வ‌ருக்கே உரிய பிரத்யேக அனுப‌வ‌ம் அது. ப‌ல‌ப்ப‌ல‌ ப‌ரிணாம‌ங்க‌ளையும் ப‌டிம‌ங்க‌ளையும் கொண்டு க‌ண்க‌ளைக் க‌ட்டிக்கொண்டு புதிர்பாதையில் விளையாடும் க‌ண்ணாமூச்சி ஆட்ட‌ம். அதுவரையில் முன் இருந்தவற்றை எல்லாம் ஒரு ஒரத்தில் தூக்கி எறிந்துவிட்டு அது மட்டுமே விஸ்வரூபம் எடுத்து செய்யும் வன்முறை.

உற‌வுக‌ளை வேண்டாத‌வ‌ர்க‌ளாக்கி ந‌ண்ப‌ர்க‌ளை தேவையான‌வ‌ர்க‌ளாக்கி காத‌ல‌னை/காத‌லியை தெய்வ‌ம்/தேவ‌தை ஆக்கிடும் ஓர் உன்ம‌த்த‌ நிலை. ஒரு புன்னகையில், ஒரு வார்த்தையில், ஒரு தொடுத‌லில், ஒரு ஆறுத‌லில், ஒரு கைப்பற்றலில், ஒரு ஊட‌லில்/கூட‌லில் இன்னொரு பிற‌ப்பைத் த‌ரும் மெய்ஞ்ஞான‌ம். ஒரு க‌த‌விலேயே சொர்க்க‌த்தையும் ந‌ர‌க‌த்தையும் காட்ட‌க்கூடிய‌ ஒரு மாய‌க்க‌ண்ணாடி. மொட்டு ஒன்று ம‌ல‌ர்வ‌தின் ரக‌சிய‌ம்.

திடீரென‌ வாழ்விற்கு வ‌ண்ணம் சேர்க்கும் நிற‌க்குடுவை. சுவை கூட்டிடும் ஒரு அற்புத‌ நிலை. ர‌ச‌னைக‌ள் சேர்க்கும் அனுப‌வ‌ம். அழ‌கிய‌ல். ந‌ம்மையும் ந‌ம் சுற்றுப்புற‌த்தையும் இய‌ற்கையையும் இசையையும் க‌லையையும் கூடுத‌ல் அழ‌காக‌ காட்டும் வ‌ண்ண‌த்திரை.

என்ன சொல்லி புரியவைப்பது காதல் என்பது என்ன என்று. வார்த்தைகளில் விளக்க முடியாததொரு பிரபஞ்சத்தின் உணர்வு. அதை நகையாடுபவர்களோ புரியாதவர்களோ, அதை கண்டிப்பாய் அனுபவிக்காதவர்களே!

எந்த‌ வ‌கையிலும் குற்ற‌ம் சொல்ல முடியாத‌ அடிப்ப‌டையான‌, அத்த‌கைய தூய்மையான உணர்வை, உற‌வை இந்த‌ காதல‌ர் தின‌த்துக்காக‌ ம‌ட்டுமே கூறுவதில் உட‌ன்பாடு இல்லையெனினும் இதை ஒரு கார‌ண‌மாய்க் கொண்டேனும் எழுதுவதில் ம‌கிழ்ச்சியே.

இவ்வ‌ள‌வு சொல்லிய‌ பிற‌கும் க‌ண்க‌ளில் விழுந்த‌ மெல்லிய‌ துரும்பாய் உறுத்தும் காதல் என்ற‌ பெய‌ரில் நம்மைச் சுற்றி ந‌‌ட‌க்கும் கூத்துக்க‌ளும் முட்டாள்த‌ன‌ங்க‌ளும்.

தொட‌ர்கிறேன்.
Related Posts with Thumbnails